12 December 2011

திங்கட்கிழமை ஏன் தான் வருகிறதோ!!

காலையில் எழுக் கூட முடியவில்லை. அலுவலகம் வந்தும் கண்ணைச் சுழற்றுகிறது. ஞாயிறு ஒரு நாள் மட்டும் விடுமுறை என்றால் எப்படி? அதுவும் ஐ.டி. கம்பெனிகளில் பணிபுரியும் என் போன்றவர்களுக்கு போதவே போதாது..

திங்கட்கிழமை மட்டும் தான் இந்த உறக்கம். இதுவே ஞாயிறு என்றால்,விடிகாலையிலேயே முழிப்பு வந்து விடுகிறது. எனக்குத் தான் இப்படியா இல்லை நம்மைப் போல் பலருக்கும் இப்படித் தானா என்று தெரியவில்லை.

ஞாயிறு காலையிலேயே எழுந்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்றோம். அங்கே பார்த்தசாரதிக்கு மட்டும் அல்லாமல் எல்லா மூலவர்க்கும் எண்ணைக்காப்பு நடக்கிறது என்று திரைப் போட்டு இருந்தார்கள். வைகுண்ட ஏகதேசிக்கு நான்கு நாட்களுக்கு முன்பு தான் திரையை எடுப்பார்களாம். அந்த மீசைக்காரனின் தரிசனம் கிடைக்கவில்லை என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் அங்கு இருக்கும் பிரசாதக் கடையில் வடை, புளியோதரை வாங்கி உண்ண ஆரம்பித்தேன்.என் கணவரோ, இவள் கோவிலுக்கு வருவதே இதை உண்ணத்தான்
என்றுக் கூறிக்கொண்டு இருந்தார். பொது வாழ்க்கையில் இது போன்ற விமர்சனங்கள்
சகஜம் என்பதால் காதில் வாங்காமல் என் கடமையில் அது தான் உண்பதில் கருத்தாய் இருந்து உண்டு முடித்து வீடு திரும்பினோம்.

சமைத்து உண்ட பின் சிறிது உறங்கி எழுந்தால் மணி 4. வீட்டிலிருந்தால் இருவருக்குள்ளும் எப்பொழுதும் குஸ்தி தான் என்பதால் இருவரும் ஒரு மனதாய் ஓஸ்திக்கு போக முடிவு செய்திருந்தோம்.

படம் என்னடாவென்றால் இந்த ஓஸ்திக்கு எங்கள் குஸ்தியே மேல் என்பது போல் இருந்தது. தலைவழி வந்தது தான் மிச்சம். வீடு திரும்பி சாப்பிட்டு படுக்கலாம் என்றால் விஜய் டிவியில் நீயா? நானா?வில் ரஜினிதான் அன்றைய தினத் தலைப்பு. எப்படி விடுவது.

ரஜினியா?,தலைவலியா? தூக்கமா? என்ற போட்டியில் வென்றது தூக்கம் தான்.

இதைக் கஷ்ட்டப்பட்டு படிக்கும் உங்களுக்கே தூக்கம் வருகிறது என்றால் எனக்கு மட்டும் வராதா என்ன??

காலையில் எழுந்ததிலிருந்து தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறாயே என்ற என் கணவருக்காவே இந்த பதிவு.

என் தூக்கத்திற்கான காரணம் சரிதானே? நீங்களே நியாயத்தை சொல்லுங்கள்!!

1 comment:

தமிழ் உதயம் said...

உலகில் தூக்கத்தை போன்ற நிம்மதியான விஷயம் ஏதுமில்லை. நாளெல்லாம் உழைத்து, களைத்து தூங்குவோம் பாருங்கள். அதற்கு ஈடினை ஏது.