19 November 2015

சென்னையில் ஒரு வெள்ளக் காலம்!

சென்னையில் மழை பெய்தாலும் பெய்தது எல்லோரும் வாட்ஸ் ஆப்பிலும், பேஸ் புக்கிலும் வெளுத்து வாங்குகிறார்கள். 

மழை ஒரு சந்தோஷம். அதுவே தொடர்மழையாகவோ அல்லது தொடர் கனமழையாகவோ இருந்தால் அது சந்தோஷமாக இருக்குமா நமக்கு. நிச்சயம் இருப்பது இல்லை. காரணம் பொருட் சேதமும் சில நேரங்களில் ஏற்படும் உயிர் சேதமும் நம்மை மிகவும் அச்சப்பட வைக்கிறது.

இந்த வெள்ளத்திற்கு மிக முக்கிய காரணமாகச் சொல்லப் படுவதில் ஒன்று ஏரி, குளங்கள் இருந்த இடத்தை எல்லாம் அடுக்குமாடி வீடுகளாக மாற்றியது. இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியவர்கள் நிலத்தை விற்றவர்களும் அதை வாங்கியவர்களும் மட்டுமல்லாமல் இந்த மழைக்கு காரணமாக இருக்கும் வருண பகவானும் தான். (அப்படி போடு அருவாளை!) 

வருண பகவான் வருடா வருடம் தவறாமல் மழையைப் பெய்ய வைத்திருந்தால் நமக்கும் எது ஏரி, எது குளம் என்று தெரிந்திருக்கும். நாமும் அதை ஏரி, குளங்களாகவே விட்டிருக்க வாய்ப்பும் உண்டு.

மக்கள் தொகையையும், வாகனப் பெருக்கத்தையும் அதிகம் ஆக்கி சுற்றுப்புறச்சூழலைக் மாசு படுத்தி விட்டு வருணபகவானைக் குறைச் சொல்லவதும் தவறு தான். என்னடா இவள் இப்படியும் பேசுகிறாள் அப்படியும் பேசுகிறாள் என்று எண்ணாதீர்கள் இதுவும் உண்மைதானே!!

எல்லாவற்றிற்க்கும் கடன்களை வாரி வாரி வழங்கும் வங்கிகளும் இதற்கு ஒரு வகையில் காரணம் என்றும் சொல்லலாம்.

நம் கட்டிட வல்லுனர்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை. இந்த இடத்தில் மழை பெய்தால் வெள்ளம் கட்டாயம் வரும் என்று தெரிந்தே இந்த அடுக்கு மாடி வீடுகளை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. கீழ்தளம் முழுவதும் வாகனங்களுக்காகவும், முதல் தளம் முதலே வீடுகளையும் அமைத்திருக்கிறார்கள். வெள்ளம் வந்தால் கீழ்தளம் மட்டுமே மூழ்கும் வகையில். என்ன ஒரு ஞானம்!

அடுத்தக் காரணமாக சொல்லப் படுவது ஏரி, குளங்களைத் தூர் வாராமல் விட்டது. இதில் இயற்கையின் பங்கோடு, நம் பங்கும் மிகமிக அதிகமாக இருக்குறது. இப்பொழுது அவசர அவசரமாகத் தூர்வாரியிருக்கும் காட்சிகளைத் தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருந்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும் அங்கே நீர் தாவரங்களோடு, நாம் தூக்கி ஏறிந்த பிளாஸ்டிக் பொருட்களும், பிளாஸ்டிக் காகிதங்களுமே அதிகம் என்று. அது நீர் வரும் தடங்களில் சென்று அடைத்துக் கொள்வதாலேயே பெரும் பாதிப்புக்குள்ளாகிறோம். அரசாங்கத்தை திட்டிக்கொண்டு இருக்காமல் நாம் செய்யும் இது போன்ற தவறுகளையும் திருத்திக் கொண்டால் இது போன்று எதிர் காலங்களில் வரும் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்கலாம் தானே. 

இந்த மழையால் எங்களுக்கு உண்டான அனுபவங்களை அடுத்த பதிவில் பதிகிறேன்.

No comments: