09 December 2015

மழை - வெள்ளத்தில் நாங்கள் - 2 !!

இது வரை ஒரே விஷயத்தைப் பற்றி இரண்டு மூன்று பதிவு பதிந்தது இல்லை. இது தான் முதல் முறை. இனி இதுப் போன்ற பதிவுகள் பதியாமல் இருப்பேனா என்று பார்ப்போம்.

வெள்ளம் எங்களைப் போன்றவர்களுக்கு நல்லதொரு அனுபவத்தைத் தந்திருந்தாலும், பலருடைய வாழ்க்கையை, வாழ்வாதாரத்தையே நிலைக்குலைய வைத்திருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

திங்கள் இரவு தொடங்கிய மழை, செவ்வாய் காலை 9 மணியளிவில் ஓய்வு எடுக்கத் தொடங்கியது. சரி ஆபிஸ் கிளம்பி விடலாம் என்று தயாராகி வண்டியை எடுக்கும் போது மணி 10. அப்பொழுது தொடங்கிய மழை தான் ஓய்வே இல்லாமல் வெளுத்து வாங்கத் தொடங்கியது. 10 மணிக்கே மின்சாரமும் போய் விட்டது.

என்னை ஆபிஸ் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டு என் கணவர் மட்டும் வண்டியில் சென்றுவிட்டார். நேரம் ஆக ஆக தண்ணீர் அதிகம் ஏறிக் கொண்டே இருந்தது. மழைக்கு ஓய்வுத் தேவைப்படவில்லை போலும். சிறிது நேரம் கூட ஓய்வில்லாமல் கொட்டிக் கொண்டே இருந்தது. எனக்கோ சிறிது கவலையோடு பயமும் வர ஆரம்பித்தது. என் கணவருக்கு போன் போட்டால் தண்ணீர் எவ்வளவு தூரம் வந்திருக்கிறது என்று மிகச் சாதாரணமாகக் கேட்டாரே தவிர கிளம்பும் பேச்சே இல்லை. மதியம் ஒன்றறை மணியிருக்கும் என் கணவரிடம் இருந்து போன். அப்பாடா! மனிதர் ஒரு வழியாகக் கிளம்பி விட்டார் போலும் என்று சந்தோஷத்தோடு போன் எடுத்தால் என் கணவரோ, என்ன சாப்பிட்டாச்சா? நான் இப்போ தான் போறேன் என்று மிகச் சதாரணமாகக் செல்கிறார்.

இப்பொழுது மணி 3.30. என்னால் பொறுக்க முடியவில்லை. இரண்டாம் படிவரை வந்து விட்ட தண்ணீரையும், சைக்கிளின் கைப் பிடி மட்டுமே தெரிந்தப் படி வந்த இருவரையும் படம் பிடித்து என் கணவருக்கு அனுப்பி விட்டு போன் போட்டு கிளம்பச் சென்னால் மெபைல் சார்ஜ் போட்டுக் கொண்டு வந்து விடுகிறேன் என்று பதில் வருகிறது.

மணி இப்பொழுது 4. 2 வது படியைத் தொட்டு விட்டது தண்ணீர். இரண்டு தெரு நாய் வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருந்தது. ஒன்று மேலே படியில் வசதியாக ஒரு இடம் பார்த்து உட்கார்ந்து விட்டது.  மற்றொன்றொ இங்கும் அங்கும் கத்திக் கொண்டே திரிந்துக் கொண்டுருந்தது. கட்டிலிலோ, படியிலோ ஏறச் சொன்னாலோ, அதற்கு உதவ முயன்றாலோ நாம் அதைத் துரத்துகிறோம் என்று நினைத்து கத்தி்க் கொண்டு கடிக்க வருகிறது. அதற்கு அவ்வளவு பயம். சரி நாம் அங்கே இருந்தால் அது படியில் ஏறாது என்ற முடிவுடன் நாங்கள் கலைந்து சென்று விட்டோம்.

மணி 5 என் கணவர் கிளம்பி இருந்தார். வழியில் இருக்கும் ஒரு ஏரியும் ரோட்டும் ஓரே மாதிரி இருந்ததாகவும், என்ன பொருட்கள் வாங்கி வர வேண்டும் என்று கேட்கத் தொடங்கினார். எனக்கும் வந்தால் வெளியேச் போக முடியாது என்பதால் அவசியமானவற்றை வாங்கச் சொல்லிவிட்டுப் பார்த்தால் ஒரு ஆள் வருகிறார் அவருக்கு இடுப்புக்கு மேலேத் தண்ணீர். இறுதியில் என் கணவர் வெற்றியுடன் பைக்கை சுமார் 1 கீ.மீ. தள்ளிக் கொண்டு வந்து சேர்ந்து விட்டார். இரண்டாவது நாயும் ஒரு வழியாக படியில் ஏறி இருந்தது. ஆனால் யார் வந்தாலும் பயத்தில் கத்திக் கொண்டே இருந்தது.

சாதுவான நாய்க்கு ஒரு அட்டை பெட்டிக் கொடுத்து அதிலேயே இரவு உணவையும் வைத்து விட்டோம். அந்த பயந்த நாய்க்கோ எதைக் கொடுத்தாலும் அதுக் கத்தவே ஒரு மிதியடியை அதன் அருகில் வைத்து விட்டு உணவை அது பார்க்கும் இடத்தில் வைத்து விட்டு வந்து விட்டோம்.

என் தங்கை தண்ணீர் மாடியில் இருந்து வருமா? பால்கனியில் இருந்து வருமா? அங்கிருந்து வருமா? இங்கிருந்து வருமா? என்று பல கேள்விகள் போனில் கேட்டுக் கொண்டேயிருந்தாள்.

இரவும் வந்து விட்டது மின்சாரமும் இல்லை. தண்ணீரும் ஏறிக்கொண்டே இருந்தது. மழையும் நிற்கவில்லை. இந்த முறை ஏரியைத் திறந்து விட்டால் கட்டாயம் முதல் மாடிக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூற ஆரம்பித்தார்கள். முதல் மாடியில் போன வெள்ளத்திற்கு ஊருக்கு போனவர்கள் இன்னும் திரும்பவில்லை. நாங்கள் மட்டுமே. எங்கள் இருவருக்கும் பயம் இலோசாக எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. ஒரு மணிக்கு ஒரு முறை எழுந்து நீரின் அளவைப் பார்க்க ஆரம்பித்தோம். இப்பொழுது தண்ணீர் 4ம் படியில்.. எங்கள் வீட்டிற்கு மேலே பொதுப் பணித் துறையில் வேலைப் பார்க்கும் ஒருவர் இருக்கிறார். அவர் தண்ணீரை நம்மால் எப்பொழுதுமே கணிக்க முடியாது. வேகம் அதிகம். அணைகளையே உடைத்துக் கொண்டு வருகிறது. அணைகள் எத்தனை அடுக்குகளுடன் எவ்வளவு பலமாக கட்டியிருப்பார்கள். அதையே உடைக்கும் என்றால் நம் வீடு எல்லாம் எம் மாத்திரம். என்று கூறி பயமுறுத்திக் கொண்டேயிருந்தார். ஒரு மணிக்கு ஒரு முறை எழுந்து விடிந்ததா என்று நான் கேட்கவும், நீரின் அளவைப் பார்த்தப் படியும் ஓட்டிக் கொண்டிருந்தோம். ஆனால் நேரம் மிகமிக மெதுவாய்த் தான் போய்க் கொண்டிருந்தது.

மற்ற நாட்களில் நேரம் இல்லை என்று எப்பொழுதும் சொல்லும் நமக்கு இன்று நேரத்தை எப்படித் தள்ளுவதே என்று தெரியவில்லை. தண்ணீர் வீட்டிற்க்குள் வருமா? வரதா? என்ற பயத்தில் நேரத்தைத் தள்ளுவதே கஷ்டமாக இருந்தது. தண்ணீர் 5வது படிக்கு வந்திருந்தது. தூக்கம் கண்களை சுழற்றுகிறது. பயம் மூளையை விளிக்கச் சொல்கிறது. என்ன தான் செய்ய? பொருட்களை எடுத்து வைத்து விடலாம் என்றால் வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் என் கணவர்.

இந்த நாய்கள் வேறு ஒவ்வொரு படியாக மேலே வரவதும். சில நேரங்களில் பயங்கரமாக ஊளையிட்டு அழவும் செய்தது. என் அம்மாவோ! நாய், பூனை போன்ற விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் வெள்ளம், பூகம்பம் வருவது எல்லாம் முன் கூட்டியே தெரிந்து விடும் என்று அவர் பங்குக்கு பயமுறுத்திக் கொண்டிருந்தார். நானும் அதைப் படித்திருக்கிறேன். தண்ணீர் வருவது, அதனால் தான் நாம் அழிய வேண்டும் என்ற விதியிருந்தால் என்ன செய்வது. விதிப் போல் நடக்கட்டும். பயத்தில் ஹாட் அட்டாக் வந்து சாவதை விட நின்று பார்த்துவிடுவோம் என்னதான் நடக்கிறதென்று. இப்படி பல எண்ண அலைகள் மனதில்.

இப்படியே எங்களுக்கேத் தெரியாமல் சிறிது கண் அசந்து விட்டோம். தீடீரென்று பயங்கர சத்தம். டம் டம் என்று ஏதோ ஒன்று சன்னலை இடிக்கிறது. என் கணவர் என்னை அவசர அவசரமாக எழுப்புகிறார். எனக்கு எங்கோ மிதப்பது போல் ஒரு உணர்வு. எழவே முடியவில்லை. ஒரே இருட்டு. ஏற்றி வைத்திருந்த அகல் விளக்கையையும் காணவில்லை. தரை முழுவதும் தண்ணீர். தட்டுத் தடுமாறி படுக்கையறையை விட்டு வெளியே வந்து பால்கனி கதவைத் திறந்தது தான் தாமதம் அறவியே வீட்டிற்க்குள் வந்து விட்டது. ஒரே ஒரு நொடிக் கூட இருக்காது. நான் கத்த ஆரம்பித்து விட்டேன். திடீரென்று என் கணவர் என் கைகளைப் பிடித்து உலுக்கவும் நான் எழவும் சரியாக இருந்தது. அத்தனையும் கனவு.

என் கணவை என் கணவரிடம் கூற அவர் விழுந்து விழுந்து சிரிக்க, வேறு வழியில்லாமல் நானும் சேர்ந்து சிரிக்க வேண்டியதாயிற்று. மறுபடியும் தண்ணீரின் வருகையைப் பார்க்கச் சென்று விட்டோம். இப்பொழுது தண்ணீர் 5ம் படியில் இருந்து 6ம் படிக்கு ஏற விடா முயற்சி செய்து கொண்டிருந்தது. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி ஆயிற்றே. சரி பார்க்கலாம் . இன்னும் 14 படிகள் இருக்கிறது வீட்டிற்க்குள் வர. எங்கள் கணக்கின் படி 1 படி ஏற அதற்கு குறைந்த பட்சம் 1ல் இருந்து 1 1\2 மணி நேரம் ஆகிறது. மணியோ இப்பொழுது 2. விடியும் வரை நமக்கு நேரம் இருக்கிறது. தூங்கிவிட்டு பிரஷ்ஷாக யோசிக்கலாம் என்று உறங்கச் சென்று விட்டோம்.

விடிந்தே விட்டது ஒரு வழியாக. வேகமாகப் போய் படியைப் பார்த்தால் 6 வது படியைத் தெட்டபடியே நின்று கொண்டிருந்தது. நாங்களும் அடச்சே நல்லதொரு வாய்ப்பு போய்விட்டதே என்ற கவலையில் (என் பதிவை இறைவன் படித்து விட்டு எங்கள் கவலையை அடுத்த வெள்ளத்தில் தீர்த்து விடுவாரோ! ஐய்ஐய்யோ கடவுளே சும்மா ஒரு விளம்பரத்திற்கு. எங்களுக்கு கொளுப்பு மிக அதிகம் ஆகிவிட்டது. அதற்கு காரணமும் கடவுள் தான். பின்னே மழை வருவதால் தானே பஜ்ஜி போட வேண்டியுள்ளது.(!!??))

காணவில்லை, காணவில்லை. பால்கனியைத் திறந்தால் எதிரே இருந்த இடத்தின் மதில் சுவரைக் காணவில்லை. தண்ணீரோ கழுத்து வரை. எங்கு நோக்கினும் தண்ணீர். இந்த முறையும் வீட்டில் அனைத்துப் பொருட்களும் இருந்ததால் எந்தக் கவலையும் பிரச்சனையும் இருக்கவில்லை. மேலே தெட்டியிலும் முழுவதும் நிரப்பி வைத்ததால் தண்ணீர் தட்டுப்பாடும் இல்லை.

இந்த முறை யாருமே எதிர்பார்காத வண்ணம் தொலைத் தொடர்பு துண்டிக்கப் பட்டு வெளி உலகேத் தொடர்பே முற்றிலும் அறுந்து விட்டது. மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது. எப்பொழுது நிற்கும். ரமணன் என்ன சென்னார். எதுவும் தெரியவில்லை. அந்த நேரத்திலும் உயிரைப் பணயம் வைத்து வியாபாரம் செய்ய வந்த நீந்தத் தெரிந்த(!) சில வியாபாரிகள் சொல்வதே எங்களுக்கு அன்றைய செய்தியாக இருந்தது.

வேடிக்கைப் பார்பதிலும் சிக்கனல் கிடைக்கிறதா என்று பார்ப்பதிலும் நேரம் போய்க் கொண்டிருந்தது. இந்த முறை லாரி வர வாய்ப்பில்லை என்பதால் படகு வர ஆரம்பித்தது.  பக்கத்து தெருவில் இருந்த மக்கள் பால்கனியில் இருந்தும் மெட்டை மாடியில் இருந்தும் படகை அழைக்கும் பொருட்டுக் கூச்சல் போட ஆரம்பித்தனர். அங்கே தான் எங்களை விட தண்ணீர் அதிகம். இரண்டு முறை வந்து அழைத்துச் சென்று அதன் சேவையை வேறுப்பக்கம் தொடரச் சென்று விட்டது. இதற்கு நடுவில் பொதுப் பணித்துறையும் கிளம்பிவிட்டார்.

நாங்கள் மூன்று குடும்பங்கள் மட்டுமே. மழை விட்டு விட்டு பெய்யத் தொடங்கியது. நாய்க்கு மூன்று வேளையும் உணவுக் கொடுத்து, நாங்களும் உண்டு புதன் கிழமையை முடித்துக் கொண்டோம்.

வியாழன் காலைக் மழை விட்டிருந்தது. கதவைத் திறந்தால் குமட்டுகிறது. எல்லாம் நம் நண்பர்களின் வேலைத் தான். மூன்று வேளை இன்புட் கொடுத்ததால் அதுவும் இரண்டாம் மாடியில் ஒரு வீட்டின் முன் அவுட்புட் செய்திருந்தது. மூக்கைப் பொத்திக் கொண்டு மாடிக்கு போய் சிக்கனல் கிடைக்காததால் தண்ணீர் சூழ்ந்து தீவுகளைப் படம் பிடிக்க ஆரம்பிக்கவும் ஹெலிகாப்டரில் உணவுப் பெட்டலங்களைப் போட வரவும் சரியாக இருந்தது. அனைவரும் மாடிக்கு வந்து கை அசைப்பதும், உதவி உதவி என்று கத்துவதுமாக இருந்தார்கள். மிகவும் பாதிக்கப் பட்டு வெளியே வரவே முடியாத பகுதிகளுக்கும், மேல் தளம் இல்லாத வீடுகளுக்குமே உணவு பெட்டலங்கள் வழங்கப் பட்டது. எங்கள் தெருவில் தண்ணீர் வடியத் தொடங்கியிருந்ததாலும், அவ்வளவு பெரிய ஆபத்தில் நாங்கள் இல்லை என்பதாலும் எங்கள் பக்கம் சுற்றி சுற்றி வந்ததே தவிர உணவுப் பொட்டலம் எதுவும் போடவில்லை. நாங்களும் படம் பிடிப்பதை மட்டுமே செய்து கொண்டிருந்தோம்.

ஒரு வழியாக வாட்ஸ் அப்பும், பேஸ்புக்கும் வேலை செய்யத் தொடங்கியது. அதன் மூலம் செய்திகளை ஊருக்கு அனுப்ப ஆரம்பித்தோம். மற்ற செய்திகளையும் தெரிந்துக் கொள்ள ஆரம்பித்தோம். ஆனால் சிக்னல் மொட்டை மாடியில் ஒரு இடத்தில் மட்டுமே கிடைத்தது. சிக்கனல் வருகிறதா என்று பார்த்துப் பார்த்தே பாட்ரியை வீணாக்கி விட்டோம். நிவாரணம் வருகிறது, ராணுவம் வருகிறது, ஹெல்ப் லைன் என்று அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். நாங்களும் முடிந்தவரை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினோம். இந்த வசதிகளின் மூலம் தான் நிறைய பேருக்கு உதவ முடிந்திருக்கிறது. நல்ல விஷயம் மழையால் உருவாகியிருக்கிறது.

ஆண்கள் வெளியே போகாமல் வீட்டில் இருப்பது என்பது மிகவும் அதிசயம். இரண்டு நாட்கள் பொறுத்தாயிற்று. வெளி உலகத் தொடர்பும் இல்லை. போகிறவர்கள, வருகிறவர்கள் எல்லாம் வேளிச்சேரி, தாம்பரம், மடிப்பாக்கம், பள்ளிக்கரனை எல்லாம் அடைக்கப் பட்டு விட்டதாகவும் அங்கு சிக்கியவர்களைக் காப்பாற்ற முயற்சிகள் நடப்பதாகவும் கூறத்தொடங்கியிருந்தனர். இதனால் பொறுக்கமுடியாத என் கணவரும் மேல் வீட்டுக்காரரும் தண்ணீரில் இறங்கி விட்டனர். வெளியே போய் நிலவரத்தை தெரிந்து கொண்டு அத்தியாயப் பொருட்களைக் கொண்டு வருவதாகச் சென்று விட்டார்கள். போகும் வழியில் அண்டைவீட்டாரிடம் ஏதாவது தேவையா என்று கேட்டுக் கொண்டு சுமார் 2 மணி நேரம் கழித்து அனைத்தையும் வாங்கி அவர்களுக்கு கொடுத்து விட்டு வந்து சேர்ந்தார்கள்.

பொருட்களின் விலையோ தறுமாறாக ஏறி இருந்தது. இதில் கொடுமை என்வென்றால் கார்டுகள் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. பணம் மட்டுமே வாங்கப்படுகிறது. இந்த காலத்தில் அதுவும் சென்னையில் எத்தனைப் பேர் கையில் பணம் வைத்திருப்பார்கள். ஏடியம் வேலை செய்யவில்லை. என்ன கொடுமை சார் இது.

மதியம் எல்லோரும் சேர்ந்து சமைத்து எங்கள் வீட்டில் அமர்ந்து உணவு உண்டு பழகும் வாய்ப்பை இந்த மழை தான் உண்டாக்கியது. மதியத்திற்கு பின் தன்னார்வத் தொண்டர்கள் வரத்தொடங்கினார்கள். அவர்களிடம்
பக்கத்துத் தெருவில் இருப்பவர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுங்கள் என்று வழி நடத்திக்கொண்டிருந்தோம்.

மறுநாள் மழையில்லாமல் நீர் குறைந்தால் வேளச்சேரி போய் எங்கள் உறவினர்களைப் பார்த்து வர முடிவு செய்தோம். அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வராததால் அனைவரும் கவலையுடன் இருந்தனர். அவர்கள் வீட்டிற்க்குள் கட்டாயம் தண்ணீர் வரும் என்று தெரியும். இந்த முறை எங்கள் இருசக்கர வாகனமே மூழ்கியதால் அவர்கள் நிலை கட்டாயம் மோசமாக வாய்ப்பிருக்கிறது என்பதாலேயே இந்த முடிவு.

இன்னொரு குடும்பமும் புறப்பட்டு விட்டது வெள்ளி அன்று. மீண்டும் போன முறைப் போன்றே இரு குடும்பங்கள் எங்களையும் சேர்த்து. இருப்பவர்களே எல்லா வேலையும்(சுத்தம் செய்வது, தண்ணீர் ஏற்பாடு செய்வது) செய்ய வேண்டும். இது தான் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் இருக்கும் பெரிய கொடுமை. யோசிக்கவே மாட்டார்கள் மக்கள்!!

சனி அன்று புறப்பட்டோம். வெளி உலகம் நான்கு நாட்களுக்குப் பின். ரோட்டில் வாகனங்களை மட்டுமே பார்த்த நமக்கு அங்கங்கே கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் வீடு வாசலை இழந்து நிற்கும் மக்கள், அவர்களுக்கு உணவுப் பொருட்களும், அத்தியாயப் பொருட்களை வழங்குக் கொண்டிருந்தனர். மருத்துவ முகாம் அமைத்து மருத்துவ சேவைகளும் நடந்துக் கொண்டிருந்தன. மெயின் ரோட்டில் தண்ணீர் வடிந்திருந்தாலும், உள்ளே தெருக்களில் எல்லாம் இன்னும் தண்ணீர் அப்படியே இருக்கிறது. அங்கங்கே குவித்து வைக்கப் பட்டிருந்த ராணுவ வீரர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் எங்களுக்கு அப்பொழுது தான் உண்மையான நிலவரம் தெரிய ஆரம்பித்தது.

எத்தனை மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நடுத்தெருவில் பிச்சைக்காரர்களைப் போல் கையோந்தி நிற்கிறார்கள். எங்களைப் போன்றவர்களுக்கு நிவாரணம் தேவையில்லை. உண்மையிலேயே நாங்கள் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

இந்த நிலையிலும் வகை வகையாக சமைத்து உண்டு, இருள் போக்க மொழுகுவர்த்தி, அகல் விளக்கு, 7மணிக்கே உறக்கம் என்று இராஜ வாழ்க்கைத் தான் வாழ்ந்திருக்கிறோம்.

இந்த வாழ்க்கைக்கு இறைவனிடம் நன்றி சொல்வதோடு நின்றுவிடாமல் அனைத்தையும் இழந்து தவிக்கும் சிலருக்கேனும் உதவ முயன்று கொண்டிருக்கிறோம்.

தண்ணீர் வீட்டிற்க்குள் வருமா வரதா என்ற பயத்தையே என்னால் தாங்க முடியவில்லை. இதில் அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களின் பயத்தையும், நிலையையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அரசு வழங்கும் நிவாரணங்கள். ஆவணங்களைப் பெற இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைத் தளர்த்திக் கொண்டால் ஒழிய மக்களுக்கு அவைகள் கிடைப்பதும் சந்தேகமே!

2 comments:

தி.தமிழ் இளங்கோ said...

படிக்கும்போது, ஒரு ஆவணப் படத்தை பார்த்தது போன்று மனதில் காட்சிகள் நிழலாடின. இனி ஒரு பயங்கரம் இதுபோல் வரக் கூடாது.

Paranthaman said...

arumaiyana pathivu bayam purinthu kolla mudikiradhu