14 December 2011

இண்டர்நெட் இல்லாமல் ஒரு நாள்!!

இன்று அலுவலகத்தில் யாருக்கும் வேலை இல்லை.
ஆமாம் இண்டர்நெட் தான் வேலை செய்யவில்லையே.
எதுவாக இருந்தாலும் கூகுள் தாத்தாவிடம் கேட்கமால் ஒரு எழுத்துக் கூட அடிக்க மாட்டோம். அவ்வளவு மாரியாதை என்று நினைக்க வேண்டாம். பல போருக்குக் கூகுள் இல்லாமல் வேலைப் பார்க்கத் தெரியாது என்பது தான் உண்மை.

பலருக்கு காலை வந்தவுடன் முதல் வேலையே ஜிமெயில், யாகூ, போஸ் புக் பார்ப்பது தான். வேலை எல்லாம் அப்புறம் தான்.

என்ன பிரச்சனை என்று மண்டையை பிய்த்துக் கொண்டே பரபரப்பாய் இயங்கும் அட்மின்ங்கள் ஒருபுறம். யார் யார் ஆன்லைனில் தகவல் (நண்பர்கள் கூட்டம் கிளையன்ட் கூட்டம் அல்ல) அனுப்பியிருப்பார்களோ என்ற தவிப்பில் சிலர். வேலைத் தான் இல்லையே இன்றய பொழுதை சிரித்துப் பேசி மகிழ்ச்சியாகக் கழிப்போம் என்ற கூட்டம் ஒரு புறம், இப்படியே போனால் வேலையை எப்படி முடிப்பது என்ற கவலையில் மேலதிகாரிகள் ஒருபுறம். என்ன செய்வது என்றே தெரியாமல் என்னைப் போல் எதையோ கிறுக்கும் கூட்டம் ஒருபுறம்.

இன்றய பொழுது இப்படியே போய் விடுமோ?? காலை 9.30க்குத் தொடங்கி இப்போது மணி மாலை 4.00 . இன்னும் சரி செய்த பாடில்லை. சிறிது நேரம் வருகிறது. பின் இணைப்பு போய் விடுகிறது.

இப்பொழுது வீட்டிற்க்கு அனுப்பினால் நன்றாகத் தான் இருக்கும். ஒரு வேளை இப்பொழுது போகச் சொல்லிவிட்டு சனிக்கிழமை வரச் சொல்லிவிடுவார்களோ?? ஐயோ வேண்டவே வேண்டாம். இன்னும் 2 1/2 மணி நேரம் தானே இப்படியே ஓட்டிவிடுலாம்.

என்ன நான் சொல்வது சரி தானே??

இண்டர்நெட் இல்லாமல் இந்த பதிவை பதியக் கூட முடியவில்லை. இண்டர்நெட் இல்லாமல் உலகமே இருண்ட மாதிரி இருக்கிறது. என்ன செய்வது?? (!!!)

ஒரு விஷயம் இந்த இண்டர்நெட் இல்லாததால் தான் இன்று என்னால் ஓரு பதிவு எழுத முடிந்தது. எல்லம் நன்மைக்கே..

12 December 2011

திங்கட்கிழமை ஏன் தான் வருகிறதோ!!

காலையில் எழுக் கூட முடியவில்லை. அலுவலகம் வந்தும் கண்ணைச் சுழற்றுகிறது. ஞாயிறு ஒரு நாள் மட்டும் விடுமுறை என்றால் எப்படி? அதுவும் ஐ.டி. கம்பெனிகளில் பணிபுரியும் என் போன்றவர்களுக்கு போதவே போதாது..

திங்கட்கிழமை மட்டும் தான் இந்த உறக்கம். இதுவே ஞாயிறு என்றால்,விடிகாலையிலேயே முழிப்பு வந்து விடுகிறது. எனக்குத் தான் இப்படியா இல்லை நம்மைப் போல் பலருக்கும் இப்படித் தானா என்று தெரியவில்லை.

ஞாயிறு காலையிலேயே எழுந்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்றோம். அங்கே பார்த்தசாரதிக்கு மட்டும் அல்லாமல் எல்லா மூலவர்க்கும் எண்ணைக்காப்பு நடக்கிறது என்று திரைப் போட்டு இருந்தார்கள். வைகுண்ட ஏகதேசிக்கு நான்கு நாட்களுக்கு முன்பு தான் திரையை எடுப்பார்களாம். அந்த மீசைக்காரனின் தரிசனம் கிடைக்கவில்லை என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் அங்கு இருக்கும் பிரசாதக் கடையில் வடை, புளியோதரை வாங்கி உண்ண ஆரம்பித்தேன்.என் கணவரோ, இவள் கோவிலுக்கு வருவதே இதை உண்ணத்தான்
என்றுக் கூறிக்கொண்டு இருந்தார். பொது வாழ்க்கையில் இது போன்ற விமர்சனங்கள்
சகஜம் என்பதால் காதில் வாங்காமல் என் கடமையில் அது தான் உண்பதில் கருத்தாய் இருந்து உண்டு முடித்து வீடு திரும்பினோம்.

சமைத்து உண்ட பின் சிறிது உறங்கி எழுந்தால் மணி 4. வீட்டிலிருந்தால் இருவருக்குள்ளும் எப்பொழுதும் குஸ்தி தான் என்பதால் இருவரும் ஒரு மனதாய் ஓஸ்திக்கு போக முடிவு செய்திருந்தோம்.

படம் என்னடாவென்றால் இந்த ஓஸ்திக்கு எங்கள் குஸ்தியே மேல் என்பது போல் இருந்தது. தலைவழி வந்தது தான் மிச்சம். வீடு திரும்பி சாப்பிட்டு படுக்கலாம் என்றால் விஜய் டிவியில் நீயா? நானா?வில் ரஜினிதான் அன்றைய தினத் தலைப்பு. எப்படி விடுவது.

ரஜினியா?,தலைவலியா? தூக்கமா? என்ற போட்டியில் வென்றது தூக்கம் தான்.

இதைக் கஷ்ட்டப்பட்டு படிக்கும் உங்களுக்கே தூக்கம் வருகிறது என்றால் எனக்கு மட்டும் வராதா என்ன??

காலையில் எழுந்ததிலிருந்து தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறாயே என்ற என் கணவருக்காவே இந்த பதிவு.

என் தூக்கத்திற்கான காரணம் சரிதானே? நீங்களே நியாயத்தை சொல்லுங்கள்!!

09 December 2011

காலம் காக்காய்களையும் மாற்றிவிட்டது!!

நம் குழந்தை பருவத்தில் பகிர்ந்து உண்பதற்கு காக்காகையைத் தான் உதாரணமாக காட்டுவார்கள்.

எங்கு உணவைக் கண்டாலும் தான் மட்டும் உண்ணாமல் மற்ற காக்காகளையும் அழைத்து பகிர்ந்து உண்ணும்

அதனால் தான் பகிர்தலுக்கு காகத்தை சொல்வார்கள்.

சிறு வயதிலிருந்தே காகத்திற்கு உணவுக் கொடுக்கும் வழக்கத்தையும் உண்டாக்கினார்கள்

காலம் மாற மாற மனிதர்கள் தான் மாறுகிறார்கள் என்றால்
மனிதன் வைத்த உணவை உண்ட காகங்களும் மாறிவிட்டன!!

ஆமாம்!

இன்றும் காகங்கள் உணவைக் கண்ட உடன் மற்ற காகங்களை அழைக்கின்றன.
உணவைப் பகிர்ந்து கொள்ள அல்ல

சின்னக் குழந்தைகள் இனிப்புக்களை மற்ற குழந்தைகளிடம் காட்டிவிட்டு சாப்பிடுவார்களே அப்படித் தான் இன்றைய காக்காய்களும்நைநை காட்டிவிட்டு முடிந்த வரை அலகால் கொத்திக் கொண்டு சொல்கின்றன!!

குரல் கேட்டு ஆசையாய் பறந்து வந்த காகங்களின் நிலையோ அந்தோ பரிதாபம்!!

இது ஒரு புறமிருக்க,

இன்றய நவின காக்காய்கள் சிறு குழந்தைகளைப் போல அடம் பிடிக்கவும் ஆரம்பித்திருக்கின்றன.

ஆமாம்!!

தினமும் அதற்கு சப்பாத்தி, பூரி என்று விதவிதமாக வேண்டுமாம்
சப்பாத்தி வைக்கும் இடத்தில் சாதம் வைத்துப் பாருங்கள்
மறுநாள் காலை நமக்குத் தான் வேலை இருக்கும்.
ஆமாம் சாதம் வைத்த இடத்தில் அப்படியே இருந்தால் நாம் தானே சுத்தம் செய்ய வேண்டும்

இதுவே சப்பாத்தி. பூரி என்று வைத்துப் பாருங்கள். ஒன்று விடமால் சாப்பிட்டு இடத்தையும் சுத்தப் படித்தியிருக்கும்

சாதத்திற்கு மட்டுமல்ல இட்லி, தோசைக்கும் இதே நிலை தான்!!

சாதம் சாப்பிடும் போது குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் கூட சில நேரங்களில் சிந்திவிடுகிறோம், காக்காய் சிந்துவதை பெரிதாக சொல்கிறாயே என்று கேட்க வேண்டாம்

நான் சிந்துகிறது என்று எழுத வரவில்லை
தீண்டுவதே இல்லை என்று தான் சொல்கிறேன்....

மனிதன் காக்கா பிடிக்கிறான் என்றால்,
காக்கவொ மனிதனைப் படிக்கிறது

காலம் காக்காய்களையும் மாற்றிவிட்டது!!

01 December 2011

பதிவு ஆரம்பம்... இது தொடருமா??

காலம் பல கடந்து விட்டது.
என் பதிவு பதிவாகி.
வேலை வேலை
அவ்வை சண்மூகி வாழ்கையாகி விட்டது
வீட்டிலும் வேலை
ஆபிஸ்லும் வேலை
எங்கு போய் பதிவது.

இப்படியே சொல்லிக் கொண்டு இருந்தால் எப்படி என்று
இன்று ஆரம்பித்து விட்டேன்.

தமிழ் தட்டச்சு மறந்தே போய் விட்டது.
தட்டுத் தடுமாறி அடிக்க ஆரம்பித்தவுடன்
அழைப்பு வந்து விட்டது என் கணவரிடம் இருந்து.

விடை பெறுகிறேன்
பார்க்கலாம் என் பதிவு தெடருமா என்று!!!