09 December 2015

மழை - வெள்ளத்தில் நாங்கள் - 2 !!

இது வரை ஒரே விஷயத்தைப் பற்றி இரண்டு மூன்று பதிவு பதிந்தது இல்லை. இது தான் முதல் முறை. இனி இதுப் போன்ற பதிவுகள் பதியாமல் இருப்பேனா என்று பார்ப்போம்.

வெள்ளம் எங்களைப் போன்றவர்களுக்கு நல்லதொரு அனுபவத்தைத் தந்திருந்தாலும், பலருடைய வாழ்க்கையை, வாழ்வாதாரத்தையே நிலைக்குலைய வைத்திருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

திங்கள் இரவு தொடங்கிய மழை, செவ்வாய் காலை 9 மணியளிவில் ஓய்வு எடுக்கத் தொடங்கியது. சரி ஆபிஸ் கிளம்பி விடலாம் என்று தயாராகி வண்டியை எடுக்கும் போது மணி 10. அப்பொழுது தொடங்கிய மழை தான் ஓய்வே இல்லாமல் வெளுத்து வாங்கத் தொடங்கியது. 10 மணிக்கே மின்சாரமும் போய் விட்டது.

என்னை ஆபிஸ் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டு என் கணவர் மட்டும் வண்டியில் சென்றுவிட்டார். நேரம் ஆக ஆக தண்ணீர் அதிகம் ஏறிக் கொண்டே இருந்தது. மழைக்கு ஓய்வுத் தேவைப்படவில்லை போலும். சிறிது நேரம் கூட ஓய்வில்லாமல் கொட்டிக் கொண்டே இருந்தது. எனக்கோ சிறிது கவலையோடு பயமும் வர ஆரம்பித்தது. என் கணவருக்கு போன் போட்டால் தண்ணீர் எவ்வளவு தூரம் வந்திருக்கிறது என்று மிகச் சாதாரணமாகக் கேட்டாரே தவிர கிளம்பும் பேச்சே இல்லை. மதியம் ஒன்றறை மணியிருக்கும் என் கணவரிடம் இருந்து போன். அப்பாடா! மனிதர் ஒரு வழியாகக் கிளம்பி விட்டார் போலும் என்று சந்தோஷத்தோடு போன் எடுத்தால் என் கணவரோ, என்ன சாப்பிட்டாச்சா? நான் இப்போ தான் போறேன் என்று மிகச் சதாரணமாகக் செல்கிறார்.

இப்பொழுது மணி 3.30. என்னால் பொறுக்க முடியவில்லை. இரண்டாம் படிவரை வந்து விட்ட தண்ணீரையும், சைக்கிளின் கைப் பிடி மட்டுமே தெரிந்தப் படி வந்த இருவரையும் படம் பிடித்து என் கணவருக்கு அனுப்பி விட்டு போன் போட்டு கிளம்பச் சென்னால் மெபைல் சார்ஜ் போட்டுக் கொண்டு வந்து விடுகிறேன் என்று பதில் வருகிறது.

மணி இப்பொழுது 4. 2 வது படியைத் தொட்டு விட்டது தண்ணீர். இரண்டு தெரு நாய் வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருந்தது. ஒன்று மேலே படியில் வசதியாக ஒரு இடம் பார்த்து உட்கார்ந்து விட்டது.  மற்றொன்றொ இங்கும் அங்கும் கத்திக் கொண்டே திரிந்துக் கொண்டுருந்தது. கட்டிலிலோ, படியிலோ ஏறச் சொன்னாலோ, அதற்கு உதவ முயன்றாலோ நாம் அதைத் துரத்துகிறோம் என்று நினைத்து கத்தி்க் கொண்டு கடிக்க வருகிறது. அதற்கு அவ்வளவு பயம். சரி நாம் அங்கே இருந்தால் அது படியில் ஏறாது என்ற முடிவுடன் நாங்கள் கலைந்து சென்று விட்டோம்.

மணி 5 என் கணவர் கிளம்பி இருந்தார். வழியில் இருக்கும் ஒரு ஏரியும் ரோட்டும் ஓரே மாதிரி இருந்ததாகவும், என்ன பொருட்கள் வாங்கி வர வேண்டும் என்று கேட்கத் தொடங்கினார். எனக்கும் வந்தால் வெளியேச் போக முடியாது என்பதால் அவசியமானவற்றை வாங்கச் சொல்லிவிட்டுப் பார்த்தால் ஒரு ஆள் வருகிறார் அவருக்கு இடுப்புக்கு மேலேத் தண்ணீர். இறுதியில் என் கணவர் வெற்றியுடன் பைக்கை சுமார் 1 கீ.மீ. தள்ளிக் கொண்டு வந்து சேர்ந்து விட்டார். இரண்டாவது நாயும் ஒரு வழியாக படியில் ஏறி இருந்தது. ஆனால் யார் வந்தாலும் பயத்தில் கத்திக் கொண்டே இருந்தது.

சாதுவான நாய்க்கு ஒரு அட்டை பெட்டிக் கொடுத்து அதிலேயே இரவு உணவையும் வைத்து விட்டோம். அந்த பயந்த நாய்க்கோ எதைக் கொடுத்தாலும் அதுக் கத்தவே ஒரு மிதியடியை அதன் அருகில் வைத்து விட்டு உணவை அது பார்க்கும் இடத்தில் வைத்து விட்டு வந்து விட்டோம்.

என் தங்கை தண்ணீர் மாடியில் இருந்து வருமா? பால்கனியில் இருந்து வருமா? அங்கிருந்து வருமா? இங்கிருந்து வருமா? என்று பல கேள்விகள் போனில் கேட்டுக் கொண்டேயிருந்தாள்.

இரவும் வந்து விட்டது மின்சாரமும் இல்லை. தண்ணீரும் ஏறிக்கொண்டே இருந்தது. மழையும் நிற்கவில்லை. இந்த முறை ஏரியைத் திறந்து விட்டால் கட்டாயம் முதல் மாடிக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூற ஆரம்பித்தார்கள். முதல் மாடியில் போன வெள்ளத்திற்கு ஊருக்கு போனவர்கள் இன்னும் திரும்பவில்லை. நாங்கள் மட்டுமே. எங்கள் இருவருக்கும் பயம் இலோசாக எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. ஒரு மணிக்கு ஒரு முறை எழுந்து நீரின் அளவைப் பார்க்க ஆரம்பித்தோம். இப்பொழுது தண்ணீர் 4ம் படியில்.. எங்கள் வீட்டிற்கு மேலே பொதுப் பணித் துறையில் வேலைப் பார்க்கும் ஒருவர் இருக்கிறார். அவர் தண்ணீரை நம்மால் எப்பொழுதுமே கணிக்க முடியாது. வேகம் அதிகம். அணைகளையே உடைத்துக் கொண்டு வருகிறது. அணைகள் எத்தனை அடுக்குகளுடன் எவ்வளவு பலமாக கட்டியிருப்பார்கள். அதையே உடைக்கும் என்றால் நம் வீடு எல்லாம் எம் மாத்திரம். என்று கூறி பயமுறுத்திக் கொண்டேயிருந்தார். ஒரு மணிக்கு ஒரு முறை எழுந்து விடிந்ததா என்று நான் கேட்கவும், நீரின் அளவைப் பார்த்தப் படியும் ஓட்டிக் கொண்டிருந்தோம். ஆனால் நேரம் மிகமிக மெதுவாய்த் தான் போய்க் கொண்டிருந்தது.

மற்ற நாட்களில் நேரம் இல்லை என்று எப்பொழுதும் சொல்லும் நமக்கு இன்று நேரத்தை எப்படித் தள்ளுவதே என்று தெரியவில்லை. தண்ணீர் வீட்டிற்க்குள் வருமா? வரதா? என்ற பயத்தில் நேரத்தைத் தள்ளுவதே கஷ்டமாக இருந்தது. தண்ணீர் 5வது படிக்கு வந்திருந்தது. தூக்கம் கண்களை சுழற்றுகிறது. பயம் மூளையை விளிக்கச் சொல்கிறது. என்ன தான் செய்ய? பொருட்களை எடுத்து வைத்து விடலாம் என்றால் வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் என் கணவர்.

இந்த நாய்கள் வேறு ஒவ்வொரு படியாக மேலே வரவதும். சில நேரங்களில் பயங்கரமாக ஊளையிட்டு அழவும் செய்தது. என் அம்மாவோ! நாய், பூனை போன்ற விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் வெள்ளம், பூகம்பம் வருவது எல்லாம் முன் கூட்டியே தெரிந்து விடும் என்று அவர் பங்குக்கு பயமுறுத்திக் கொண்டிருந்தார். நானும் அதைப் படித்திருக்கிறேன். தண்ணீர் வருவது, அதனால் தான் நாம் அழிய வேண்டும் என்ற விதியிருந்தால் என்ன செய்வது. விதிப் போல் நடக்கட்டும். பயத்தில் ஹாட் அட்டாக் வந்து சாவதை விட நின்று பார்த்துவிடுவோம் என்னதான் நடக்கிறதென்று. இப்படி பல எண்ண அலைகள் மனதில்.

இப்படியே எங்களுக்கேத் தெரியாமல் சிறிது கண் அசந்து விட்டோம். தீடீரென்று பயங்கர சத்தம். டம் டம் என்று ஏதோ ஒன்று சன்னலை இடிக்கிறது. என் கணவர் என்னை அவசர அவசரமாக எழுப்புகிறார். எனக்கு எங்கோ மிதப்பது போல் ஒரு உணர்வு. எழவே முடியவில்லை. ஒரே இருட்டு. ஏற்றி வைத்திருந்த அகல் விளக்கையையும் காணவில்லை. தரை முழுவதும் தண்ணீர். தட்டுத் தடுமாறி படுக்கையறையை விட்டு வெளியே வந்து பால்கனி கதவைத் திறந்தது தான் தாமதம் அறவியே வீட்டிற்க்குள் வந்து விட்டது. ஒரே ஒரு நொடிக் கூட இருக்காது. நான் கத்த ஆரம்பித்து விட்டேன். திடீரென்று என் கணவர் என் கைகளைப் பிடித்து உலுக்கவும் நான் எழவும் சரியாக இருந்தது. அத்தனையும் கனவு.

என் கணவை என் கணவரிடம் கூற அவர் விழுந்து விழுந்து சிரிக்க, வேறு வழியில்லாமல் நானும் சேர்ந்து சிரிக்க வேண்டியதாயிற்று. மறுபடியும் தண்ணீரின் வருகையைப் பார்க்கச் சென்று விட்டோம். இப்பொழுது தண்ணீர் 5ம் படியில் இருந்து 6ம் படிக்கு ஏற விடா முயற்சி செய்து கொண்டிருந்தது. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி ஆயிற்றே. சரி பார்க்கலாம் . இன்னும் 14 படிகள் இருக்கிறது வீட்டிற்க்குள் வர. எங்கள் கணக்கின் படி 1 படி ஏற அதற்கு குறைந்த பட்சம் 1ல் இருந்து 1 1\2 மணி நேரம் ஆகிறது. மணியோ இப்பொழுது 2. விடியும் வரை நமக்கு நேரம் இருக்கிறது. தூங்கிவிட்டு பிரஷ்ஷாக யோசிக்கலாம் என்று உறங்கச் சென்று விட்டோம்.

விடிந்தே விட்டது ஒரு வழியாக. வேகமாகப் போய் படியைப் பார்த்தால் 6 வது படியைத் தெட்டபடியே நின்று கொண்டிருந்தது. நாங்களும் அடச்சே நல்லதொரு வாய்ப்பு போய்விட்டதே என்ற கவலையில் (என் பதிவை இறைவன் படித்து விட்டு எங்கள் கவலையை அடுத்த வெள்ளத்தில் தீர்த்து விடுவாரோ! ஐய்ஐய்யோ கடவுளே சும்மா ஒரு விளம்பரத்திற்கு. எங்களுக்கு கொளுப்பு மிக அதிகம் ஆகிவிட்டது. அதற்கு காரணமும் கடவுள் தான். பின்னே மழை வருவதால் தானே பஜ்ஜி போட வேண்டியுள்ளது.(!!??))

காணவில்லை, காணவில்லை. பால்கனியைத் திறந்தால் எதிரே இருந்த இடத்தின் மதில் சுவரைக் காணவில்லை. தண்ணீரோ கழுத்து வரை. எங்கு நோக்கினும் தண்ணீர். இந்த முறையும் வீட்டில் அனைத்துப் பொருட்களும் இருந்ததால் எந்தக் கவலையும் பிரச்சனையும் இருக்கவில்லை. மேலே தெட்டியிலும் முழுவதும் நிரப்பி வைத்ததால் தண்ணீர் தட்டுப்பாடும் இல்லை.

இந்த முறை யாருமே எதிர்பார்காத வண்ணம் தொலைத் தொடர்பு துண்டிக்கப் பட்டு வெளி உலகேத் தொடர்பே முற்றிலும் அறுந்து விட்டது. மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது. எப்பொழுது நிற்கும். ரமணன் என்ன சென்னார். எதுவும் தெரியவில்லை. அந்த நேரத்திலும் உயிரைப் பணயம் வைத்து வியாபாரம் செய்ய வந்த நீந்தத் தெரிந்த(!) சில வியாபாரிகள் சொல்வதே எங்களுக்கு அன்றைய செய்தியாக இருந்தது.

வேடிக்கைப் பார்பதிலும் சிக்கனல் கிடைக்கிறதா என்று பார்ப்பதிலும் நேரம் போய்க் கொண்டிருந்தது. இந்த முறை லாரி வர வாய்ப்பில்லை என்பதால் படகு வர ஆரம்பித்தது.  பக்கத்து தெருவில் இருந்த மக்கள் பால்கனியில் இருந்தும் மெட்டை மாடியில் இருந்தும் படகை அழைக்கும் பொருட்டுக் கூச்சல் போட ஆரம்பித்தனர். அங்கே தான் எங்களை விட தண்ணீர் அதிகம். இரண்டு முறை வந்து அழைத்துச் சென்று அதன் சேவையை வேறுப்பக்கம் தொடரச் சென்று விட்டது. இதற்கு நடுவில் பொதுப் பணித்துறையும் கிளம்பிவிட்டார்.

நாங்கள் மூன்று குடும்பங்கள் மட்டுமே. மழை விட்டு விட்டு பெய்யத் தொடங்கியது. நாய்க்கு மூன்று வேளையும் உணவுக் கொடுத்து, நாங்களும் உண்டு புதன் கிழமையை முடித்துக் கொண்டோம்.

வியாழன் காலைக் மழை விட்டிருந்தது. கதவைத் திறந்தால் குமட்டுகிறது. எல்லாம் நம் நண்பர்களின் வேலைத் தான். மூன்று வேளை இன்புட் கொடுத்ததால் அதுவும் இரண்டாம் மாடியில் ஒரு வீட்டின் முன் அவுட்புட் செய்திருந்தது. மூக்கைப் பொத்திக் கொண்டு மாடிக்கு போய் சிக்கனல் கிடைக்காததால் தண்ணீர் சூழ்ந்து தீவுகளைப் படம் பிடிக்க ஆரம்பிக்கவும் ஹெலிகாப்டரில் உணவுப் பெட்டலங்களைப் போட வரவும் சரியாக இருந்தது. அனைவரும் மாடிக்கு வந்து கை அசைப்பதும், உதவி உதவி என்று கத்துவதுமாக இருந்தார்கள். மிகவும் பாதிக்கப் பட்டு வெளியே வரவே முடியாத பகுதிகளுக்கும், மேல் தளம் இல்லாத வீடுகளுக்குமே உணவு பெட்டலங்கள் வழங்கப் பட்டது. எங்கள் தெருவில் தண்ணீர் வடியத் தொடங்கியிருந்ததாலும், அவ்வளவு பெரிய ஆபத்தில் நாங்கள் இல்லை என்பதாலும் எங்கள் பக்கம் சுற்றி சுற்றி வந்ததே தவிர உணவுப் பொட்டலம் எதுவும் போடவில்லை. நாங்களும் படம் பிடிப்பதை மட்டுமே செய்து கொண்டிருந்தோம்.

ஒரு வழியாக வாட்ஸ் அப்பும், பேஸ்புக்கும் வேலை செய்யத் தொடங்கியது. அதன் மூலம் செய்திகளை ஊருக்கு அனுப்ப ஆரம்பித்தோம். மற்ற செய்திகளையும் தெரிந்துக் கொள்ள ஆரம்பித்தோம். ஆனால் சிக்னல் மொட்டை மாடியில் ஒரு இடத்தில் மட்டுமே கிடைத்தது. சிக்கனல் வருகிறதா என்று பார்த்துப் பார்த்தே பாட்ரியை வீணாக்கி விட்டோம். நிவாரணம் வருகிறது, ராணுவம் வருகிறது, ஹெல்ப் லைன் என்று அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். நாங்களும் முடிந்தவரை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினோம். இந்த வசதிகளின் மூலம் தான் நிறைய பேருக்கு உதவ முடிந்திருக்கிறது. நல்ல விஷயம் மழையால் உருவாகியிருக்கிறது.

ஆண்கள் வெளியே போகாமல் வீட்டில் இருப்பது என்பது மிகவும் அதிசயம். இரண்டு நாட்கள் பொறுத்தாயிற்று. வெளி உலகத் தொடர்பும் இல்லை. போகிறவர்கள, வருகிறவர்கள் எல்லாம் வேளிச்சேரி, தாம்பரம், மடிப்பாக்கம், பள்ளிக்கரனை எல்லாம் அடைக்கப் பட்டு விட்டதாகவும் அங்கு சிக்கியவர்களைக் காப்பாற்ற முயற்சிகள் நடப்பதாகவும் கூறத்தொடங்கியிருந்தனர். இதனால் பொறுக்கமுடியாத என் கணவரும் மேல் வீட்டுக்காரரும் தண்ணீரில் இறங்கி விட்டனர். வெளியே போய் நிலவரத்தை தெரிந்து கொண்டு அத்தியாயப் பொருட்களைக் கொண்டு வருவதாகச் சென்று விட்டார்கள். போகும் வழியில் அண்டைவீட்டாரிடம் ஏதாவது தேவையா என்று கேட்டுக் கொண்டு சுமார் 2 மணி நேரம் கழித்து அனைத்தையும் வாங்கி அவர்களுக்கு கொடுத்து விட்டு வந்து சேர்ந்தார்கள்.

பொருட்களின் விலையோ தறுமாறாக ஏறி இருந்தது. இதில் கொடுமை என்வென்றால் கார்டுகள் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. பணம் மட்டுமே வாங்கப்படுகிறது. இந்த காலத்தில் அதுவும் சென்னையில் எத்தனைப் பேர் கையில் பணம் வைத்திருப்பார்கள். ஏடியம் வேலை செய்யவில்லை. என்ன கொடுமை சார் இது.

மதியம் எல்லோரும் சேர்ந்து சமைத்து எங்கள் வீட்டில் அமர்ந்து உணவு உண்டு பழகும் வாய்ப்பை இந்த மழை தான் உண்டாக்கியது. மதியத்திற்கு பின் தன்னார்வத் தொண்டர்கள் வரத்தொடங்கினார்கள். அவர்களிடம்
பக்கத்துத் தெருவில் இருப்பவர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுங்கள் என்று வழி நடத்திக்கொண்டிருந்தோம்.

மறுநாள் மழையில்லாமல் நீர் குறைந்தால் வேளச்சேரி போய் எங்கள் உறவினர்களைப் பார்த்து வர முடிவு செய்தோம். அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வராததால் அனைவரும் கவலையுடன் இருந்தனர். அவர்கள் வீட்டிற்க்குள் கட்டாயம் தண்ணீர் வரும் என்று தெரியும். இந்த முறை எங்கள் இருசக்கர வாகனமே மூழ்கியதால் அவர்கள் நிலை கட்டாயம் மோசமாக வாய்ப்பிருக்கிறது என்பதாலேயே இந்த முடிவு.

இன்னொரு குடும்பமும் புறப்பட்டு விட்டது வெள்ளி அன்று. மீண்டும் போன முறைப் போன்றே இரு குடும்பங்கள் எங்களையும் சேர்த்து. இருப்பவர்களே எல்லா வேலையும்(சுத்தம் செய்வது, தண்ணீர் ஏற்பாடு செய்வது) செய்ய வேண்டும். இது தான் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் இருக்கும் பெரிய கொடுமை. யோசிக்கவே மாட்டார்கள் மக்கள்!!

சனி அன்று புறப்பட்டோம். வெளி உலகம் நான்கு நாட்களுக்குப் பின். ரோட்டில் வாகனங்களை மட்டுமே பார்த்த நமக்கு அங்கங்கே கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் வீடு வாசலை இழந்து நிற்கும் மக்கள், அவர்களுக்கு உணவுப் பொருட்களும், அத்தியாயப் பொருட்களை வழங்குக் கொண்டிருந்தனர். மருத்துவ முகாம் அமைத்து மருத்துவ சேவைகளும் நடந்துக் கொண்டிருந்தன. மெயின் ரோட்டில் தண்ணீர் வடிந்திருந்தாலும், உள்ளே தெருக்களில் எல்லாம் இன்னும் தண்ணீர் அப்படியே இருக்கிறது. அங்கங்கே குவித்து வைக்கப் பட்டிருந்த ராணுவ வீரர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் எங்களுக்கு அப்பொழுது தான் உண்மையான நிலவரம் தெரிய ஆரம்பித்தது.

எத்தனை மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நடுத்தெருவில் பிச்சைக்காரர்களைப் போல் கையோந்தி நிற்கிறார்கள். எங்களைப் போன்றவர்களுக்கு நிவாரணம் தேவையில்லை. உண்மையிலேயே நாங்கள் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

இந்த நிலையிலும் வகை வகையாக சமைத்து உண்டு, இருள் போக்க மொழுகுவர்த்தி, அகல் விளக்கு, 7மணிக்கே உறக்கம் என்று இராஜ வாழ்க்கைத் தான் வாழ்ந்திருக்கிறோம்.

இந்த வாழ்க்கைக்கு இறைவனிடம் நன்றி சொல்வதோடு நின்றுவிடாமல் அனைத்தையும் இழந்து தவிக்கும் சிலருக்கேனும் உதவ முயன்று கொண்டிருக்கிறோம்.

தண்ணீர் வீட்டிற்க்குள் வருமா வரதா என்ற பயத்தையே என்னால் தாங்க முடியவில்லை. இதில் அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களின் பயத்தையும், நிலையையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அரசு வழங்கும் நிவாரணங்கள். ஆவணங்களைப் பெற இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைத் தளர்த்திக் கொண்டால் ஒழிய மக்களுக்கு அவைகள் கிடைப்பதும் சந்தேகமே!

24 November 2015

மழை - வெள்ளத்தில் நாங்கள்!!

வார நாட்களில் மூன்று நாட்கள் எந்த வித அலுவலகத் தொல்லையின்றி கிடைப்பது என்பது நம்மில் பலருக்கு ஒரு வரமாகவே இருக்கும். சென்னையில் கொட்டித்தீர்த்த இந்த மழையால் அந்த மிக அரிய வரம் எங்களுக்கும் கிடைத்தது. இந்த மழையால் எங்களுக்கு கிடைத்த அனுபவம் மிக அருமை.

வீட்டிற்குள் தண்ணீர் வராமல், அடிபடைத் தேவைகளான பலசரக்கு சமானங்கள், காய்கறிகள், பால், குடிக்கத் தண்ணீர் அனைத்தும் இருந்தால் கட்டாயம் இந்த மழையை இரசிக்க முடியும்.

எங்கள் வீடு முதல் மாடி என்பதாலேயே வீட்டிற்குள் மழைத் தண்ணீரால் வரமுடியவில்லை.  மழை ஆரம்பித்தவுடனேயே மின்சாரத்தை நிறுத்தி விட்டார்கள். மின்சாரம் இல்லாமல் போனாலே வெளியுலகத் தொடர்பு கொஞ்சம் கொஞ்சம் காணமல் போய் விடுகிறது. மழை நின்றாலேயன்றி மின்சாரம் வரப் போவதில்லை. எப்படித்தான் பொழுது போகப் போகிறதோ என்று பயந்த எங்களுக்கு பொழுது எப்படிப் போனது என்றேத் தெரியவில்லை.


அடுக்குமாடி வீடு என்பதால் தண்ணீர் எந்த நேரத்திலும் தீரும் வாய்ப்பு அதிகம். முடிந்தவரை தண்ணீரை சேமித்துக் கொண்டோம். மழை அதிகமாகிக் கொண்டே போனதே தவிர குறையும் வழி இல்லை. இந்த மழை விடாது இரண்டு மூன்று நாட்கள் தொடரும், அணைகள், ஏரிகள் நிரம்பத் தொடங்கிவிட்டது. எந்த நேரத்திலும் அது உடைய வாய்ப்புண்டு. ஜாக்கிரதையாய் இருங்கள் என்று அன்போடும் அக்கறையோடும் உறவினர்களும், நண்பர்களும் தொலைப்பேசியில் பயமுறத்தத் தொடங்கி விட்டார்கள். இதற்கு எல்லாம் பயப்படும் ஜன்மமா நாங்கள். என்னத் தான் நடக்கும் என்று பார்த்துவிடாலாம் என்ற முடிவுடன் அந்த மழைக்கு இதமாக இருக்கும் என்று சுடச்சுட வெங்காய பஜ்ஜி செய்து வழக்கம் போல் அதைப் படம் பிடித்து வாட்ஸ்ஆப்பில் அனைவருக்கும் அனுப்பி சும்மா இருந்தவர்களையும் உசுப்போத்தி விட்டோம். ஏதோ எங்களால் முடிந்த ஒன்று.

ஞாயிறு மழை மிக அதிகம். அந்த மழையில் நணைந்த படி, அப்போழுதே முட்டிக்கு மேல் வரத் தொடங்கிய மழை நீரில் நீந்திச் சென்று வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் வாங்கி வந்த என் கணவரை இங்கு நான் பாராட்டாமல் இருக்க முடியாது.

இதிலும் கடமைத்தவராத வாட்ஸ்ஆப் குருப்பின் அட்மின் ஆன என் கணவர் வழியில் பார்த்த அனைத்தையும் படம் பிடித்து அனுப்பியது பலரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

இதில் குறிப்பிட்டே ஆக வேண்டிய விஷயம் கடையில் இருந்து வீட்டிற்கு வர ஆட்டோ ஏறிய என் கணவர் ஆட்டோ டிரைவரிடம் 'இந்த பாதையில் சென்றால் குறுக்கு வழி, ஆனால் தண்ணீர் மிகமிக அதிகம். நாம் சுற்றியே போய் விடுவோம் என்று சொல்ல, அதற்கு அந்த டிரைவர் இல்ல சார் நாம இந்த வழியிலேயே போய் பார்க்கலாம் என்று அந்த வழியிலேயே ஆட்டோவில் நீந்திய படியே ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தார். ' அந்த பயணத்தின் போது ஆட்டோவிற்குள் தண்ணீர் புகுவதை வீடியோ எடுக்கத் தவற வில்லை என் கணவர். நாங்கள் எல்லாம் எப்படி!! நாங்கள் தான் இப்படி என்றால் எங்களுக்கு கிடைத்த ஆட்டோ டிரைவரும் இப்படி அமைந்தது நல்ல அனுபவம். வீட்டிற்க்குள் நுழைந்து இதைச் சொன்னவுடன் நான் கேட்ட முதல் கேள்வி என்வாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். அந்த ஆட்டோ டிரைவர் நம்பர் வாங்கினீர்களா என்பது தான். எப்படி?

அன்று மழை நிற்கவே இல்லை. வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் வர ஆரம்பித்தது. காலி இடங்கள் எல்லாம் ஏரி, குளங்களாகக் காட்சியளிக்கத் தொடங்கின. நாங்களும் அதை படம் பிடித்து தற்போதைய நிலவரம் என்று எல்லோருக்கும் அனுப்பி எங்களை பயமுறுத்தியவர்களை எல்லாம் பயமுறத்த ஆரம்பித்தோம்.

குடையுடன் எல்லோரும் மொட்டை மாடிச் சென்று ஏரியல் வியுவ் என்று எங்கள் மெத்த ஏரியாவும் எப்படி தண்ணீரில் மூழ்கிக் கொண்டு இருக்கிறது என்று பல கோணங்களில் படமாகவும், வீடியோவாகவும் அனுப்பி, அனுப்பி அன்றையப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தோம். இதில் தண்ணீர் தீர்ந்து விடுமோ என்று பெரிய டிரம், குடம் என்று  மழை நீரை சேமிக்க ஆரம்பித்தோம். தண்ணீர் தொட்டியைக் கூடத் திறந்து வைத்து மழை நீரை சேமிக்கத் தொடங்கினோம்.


காலையில் இருந்து அனுப்பிய படங்களையும், வீடியோக்களையும் பார்த்து வெளிநாடுகளில் இருந்து அழைப்பு வர ஆரம்பித்தது. எல்லோருக்கும் நாங்கள் நல்லப் படியாக இருக்கிறோம். ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லி சொல்லியே நடு இரவு வந்து விட்டது. இன்றைக்கு பொழுதை ஓட்டிவிட்டோம் உறங்களாம் என்று செல்லவும் நம் நண்பர்கள் அதுதாங்க கொசுக்கள் எங்களை நலம் விசாரிக்கவும் சரியாக இருந்தது. மின் விசிறி வேறு இல்லை. பிரச்சனை நம்பர் 1 என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதிர்ஷடம் நம்பர் 2 என்றார் என் கணவர். நம்பர் 1 ஆட்டோ. நம்பர் 2 கொசு பிரச்சனைக்கு பேஸ்புக்கில் தீர்வு. தண்ணீரில் சுடம் போட்டு வைத்தால் கொசு வராது. முயற்சித்தோம். கொசுவும் ஏமாந்து விட்டது. நிம்மதியான உறக்கம் எங்களுக்கு. நமக்கு கூட இப்படி ஒரு நல்ல அதிர்ஷ்டமா!!

மறுநாள் காலையிலும் மழை நின்றபாடில்லை. நான்கு சுவர்களோடு எப்பொழுதும் தண்ணீர் நிறைந்து ஒரு குளம் போல் தோற்றமளிக்கும் எங்கள் வீட்டிற்கு எதிரில் இருக்கும் இடத்தில் சுவர்கள் ஆங‍்காங்கே காணமல் போய் இருந்தன. ரொம்ப நாளாய் ஒரு ஓட்டைப் போட்டு தண்ணீரை எடுக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன். எல்லாம் இந்த கொசுக்களால் தான். இன்று கடவுளே மழையை அனுப்பி எங்கள் குறையைத் தீர்த்துவிட்டார் ( அதிர்ஷடம் நம்பர் 3 ) . நேற்றைய அதிர்ஷடம் இன்றும் தொடர்கிறதே என்று மகிழ்ந்து குழாயைத் திறந்தால் வெறும் காற்றுத் தான் வருது. தண்ணீர் வரவில்லை ( பிரச்சனை நம்பர் 2) .

சேமித்து வைத்த தண்ணீரை எடுத்துக் கொள்ளத் தொடங்கினோம். மழையோ நின்ற பாடில்லை. மின்சாரமும் வரும் அறிகுறியும் இல்லை. தண்ணீர் தான் அதிகமாகிக் கொண்டே போகிறதே. மழையும் நின்ற பாடில்லை. சின்னச் சின்ன குழந்தைகளை வைத்திருப்பவர்கள் எல்லாம் பயந்துப் போய் மூட்டை மூடிச்சைக் கட்டிக் கொண்டும் தங்கள் குழந்தைகளைத் தங்கள் தோலில் சுமந்துக் கொண்டும் செல்லத் தொடங்கினார்கள். எப்படியாவது மெயின் ரோட்டிற்க்குச் சொன்று விட்டால் ஏதோனும் வாகனம் பிடித்துச் சொன்று விடாலாம் என்ற எண்ணத்திலேயே இடுப்பு வரை வந்து விட்ட தண்ணீரில் நடக்கத் (மிதக்கத்) தொடங்கினார்கள்.

இப்படி வேடிக்கைப் பார்ப்பதிலும், சமையல் வேலையிலுமே காலைப் பொழுது போய் விட்டது. மதியம் நிறைய மக்கள் வெளியேறத் தொடங்கினார்கள். அவர்களிடம் விசாரித்தப் போதுதான் தெரிந்தது. எங்கள் ஏரியாவில் உள்ளவர்களை அழைத்துச் செல்ல படகும், லாரியும் வருகிறது என்று. முதலில் லாரி வந்து மக்களை ஏற்றிக் கொள்ள ஆரம்பித்தது. நாங்களும் வழக்கம் போல் படம் பிடிக்கத் தொடங்கினோம். வாட்ஸ் ஆப்பில் அனுப்ப வேண்டும் அல்லவா!!.


நேரம் ஆக ஆக குடித்தண்ணீரும், மேலே சேமித்து வைத்திருந்த தண்ணீரும் குறையத் தொடங்கியது.  ஒவ்வொருவருக்கும் பயமும் உண்டாகத் தொடங்கியது. தண்ணீரை நாம் எதிர்க் கொள்ளவது மிகக் கடினம். மழையும் நிற்கும் எண்ணத்தில் இல்லை. நாங்களும் அந்த இடத்தை விட்டு நகரும் எண்ணத்தில் இல்லை. மற்ற குடும்பங்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த நேரத்தில் நிறைய பேர் கிளம்பிப் போனால் இருக்கும் தண்ணீரை வைத்து இன்னும் ஒரு நாள் சமாளிக்கலாம் என்று எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.
எங்கள் குடியிருப்பில் ஒரு குடும்பம் வெளியேறத் தாயார் ஆகியது. லாரியோ,படகோ வரக் காத்திருக்க தொடங்கினர். நாங்கள் எங்கள் அப்பார்ட்மென்டுக்குள் படகு வருமா, அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று படம் பிடிக்க மெபைலுடன் காத்திருக்கத் தொடங்கினோம்.


நேரம் ஓட ஓட படகும் வரவில்லை. லாரியும் வரவில்லை. அதற்கு பதில் பால் பாக்கெட், பிஸ்கட், தண்ணீர் கேன் வேண்டுமா என்று கேட்டு வியாபாரிகள் அந்த மழையிலும். வெள்ளத்திலும் மிதந்தப் படி வந்தார்கள். சரியான வியாபாரம். அவர்கள் வாயில் அந்த நேரத்தில் வரும் விலை தான் அந்த பெருளின் விலை. ஒரு தண்ணீர் கேனை ரூபாய் 100 க்கு வாங்கினோம். என்ன செய்ய அந்த நேரத்தில் நமக்கு 100 ரூபாயை விட தண்ணீர் தானே முக்கியமாகத் தேன்றுகிறது. இந்த மழையிலும், இவ்வளவு தண்ணீரிலும் நமக்கு தேவையானதைக் கொண்டு வந்து கொடுக்கிறார்களே என்று தான் தோன்றுகிறது. எத்தனை இடத்தில் இது கூட கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் வீட்டிற்கு வெளியே எங்குப் பார்த்தாலும் தண்ணீர், தண்ணீர். தண்ணீர் மட்டும் தான். ஆனால் வீட்டிற்கு உள்ளேயோ குடிப்பதற்க்குக் கூட தண்ணீர் இல்லை. என்னக் கொடுமை சார் இது!!

ஒரு வழியாக நாங்கள் எதிர்பார்த்த அந்த தருணமும் வந்தே விட்டது. ஆம்! படகு எங்கள் கார் பார்க்கிற்க்குள் வந்து விட்டது. படகு என்றால் இது சதாரண படகு இல்லை. இப்படி ஒன்றை நாங்கள் நினைத்துக் கூட பார்த்ததில்லை. அப்படி என்னத்தான் சிறப்பு என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.

ஒரு பெரிய பலகை. நம் வீட்டின் முன்னால் இருக்குமே கதவு அது போன்ற பலகை. அதன் இரு பக்கங்களிலும் கயிற்றால் கட்டப்பட்ட இரண்டு டிரம்கள். உண்மையான படகை எதிர்ப்பார்த்த எங்களுக்கு இந்தப்படகு கொஞ்சம் ஏமாற்றம் தந்தாலும் ஏதோ ஒரு படகு எங்கள் வீட்டிற்க்குள்ளும் வந்து விட்டது என்ற பெருமை எங்களுக்கு. படம் பிடித்து தள்ளிக் கொண்டிருந்தோம்.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், பெண்களும், குழந்தைகளும் மட்டுமே அதில் அமர வேண்டும் மற்றவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு வர வேண்டுமாம். ஓடுவது மழை நீர் என்றால் பரவாயில்லை. கழிவு நீரும் அல்லவா கலந்துக் கொண்டு ஓடுகிறது.எப்படி இருந்திருக்கும்.  இதிலும் ஒரு நாய் என்ன அழகாய் நீந்திச் சென்றது. தெரியுமா?

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், பெண்களும், குழந்தைகளும் மட்டுமே அதில் அமர வேண்டும் மற்றவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு வர வேண்டுமாம். எப்படி இருந்திருக்கும். வேறு வழியில்லாமல் மற்றவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு நீந்துவதைப் பரிதாபமாக மேலே பால்கனியில் இருந்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கத் தொடங்கினோம். மாலை நிலவரத்தை வாட்ஸ் ஆப்பில் போட வேண்டும் அல்லவா!!

இப்படியே மாலைப் பொழுது போய்க் கொண்டிருந்தது. இன்னும் நான்கு குடும்பங்கள் எங்களையும் சேர்த்து. சிறிது நேரத்தில் மேல் வீட்டுற்கு அவர் உறவினர் வந்து கைக்குழந்தையை வைத்துக் கொண்டு ஏன் இன்னமும் இங்கே இருக்கிறீர்கள் என்றுக் கூறிக் கொண்டே விரைந்து யாருக்கோ போன் போட்டு ஒரு லாரிக்கு ஏற்பாடும் செய்தார். இன்னொரு குடும்பமும் அவர்களுடன் சேர்ந்துக் கொள்ள தயாரானது.

இப்பொழுது எங்கள் நிலமை தலைக் கீழானது. பால், தண்ணீர் என்று அதிக விலைக்கொடுத்து வாங்கி வைத்தோம் அல்லவா, இப்பொழுது என்னடாவென்றால் கிளம்பத் தயாராய் இருந்தவர்கள் தங்களிடம் உள்ள பால், பழம், காய்கறி, தண்ணீர் அனைத்தையும் எங்களிடம் கொடுக்கத் தொடங்கினார்கள்.(அதிர்ஷடம் நம்பர் - 4). இவ்வளவு நேரம் என்ன செய்வது என்று திகைத்து நின்ற நாங்கள் இப்பொழுது சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு விடைக் கொடுத்து அனுப்பிவிட்டு நிலவரத்தை வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்து விட்டு உறங்கச் சென்று விட்டோம்.

மறுநாள் காலையில் மழை நின்றிருந்தது. தண்ணீர் கொஞ்சம் குறையத் தொடங்குவதுப் போல் இருந்தது. மின்சாரம் இல்லை. தண்ணீர் வற்றினால் ஒழிய மின்சாரம் வரப்போவதில்லை. மின்சாரம் இல்லாமல் இரண்டு நாட்கள் ஆன்ட்ராய்டு மொபைல் எப்படி என்று நீங்கள் யோசிப்பது கேட்கிறது. மழை என்று சென்னவுடனே நாங்கள் செய்த நல்ல காரியம். மொபைலை, இரண்டு பவர் பாங்க், லாப்டாப் என்று எல்லாவற்றையும் முழுவதும் சார்ஜ் செய்து வைத்தது தான் எங்கள் சிறப்பம்சம். சாப்பாடு, தண்ணீர் கூட இல்லாமல் நாங்கள் இருந்து விடுவோம். ஆனால் மொபைல் வாட்ஸ் ஆப் இல்லாமல் சத்தியமாக முடியாது. நாங்களெல்லாம் எப்பவுமே இப்படித் தான்!!!!!

மின்சாரத் துறையில் இருந்து சிலர் கீழே ஏதேனும் மின்சார வயர்கள் கீழே கிடக்கிறதா என்று பார்த்தப்படியே சென்று கொண்டிருந்தார்கள். அவர்களிடம் மின்சாரம் எப்ப சார் வரும் என்று கேட்க அவர்கள் இன்னும் ஒன் அவர்ல வந்துரும் சார் என்று காதில் தேன் பாய்ச்சிச் சென்ற போது காலை மணி 11.00

பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கொடுத்துவிட்டுச் சென்ற பழம், காய்கறி அனைத்தையும் மின்சாரம் இல்லாததால் பிரிஜ்க்குள் வைக்காமல் வெளியே மேஜை மீது வைத்திருந்தோம். இப்பொழுது பார்த்தால் நிறையக் கொசுக்கள். சிலப் பழங்கள் அதற்குள்ளாகவே அழுகத் தொடங்கியிருந்தன. இந்தக் கொசுக்களிடம் இருந்து இதை எப்படிக் காப்பது. மலேரியா, டொங்கு என்று பயமுறுத்தும் இந்த நாளில் நம்மை எப்படிக் காப்பது. (பிரச்சனை நம்பர் - 3)

பிடித்து வைத்திருந்த தண்ணீர் முழுவதும் தீர்ந்து விட்டது. மழையும் நின்று விட்டது. ஆந்திர நோக்கி நகர்ந்து விட்டது என்று ரமணன் அறிவித்தச் செய்தி தொலைப்பேசியின் வாயிலாக எங்களையும் எட்டிவிட்டது. கீழே தண்ணீர் கார் பார்க்கில் இருந்து சிறிது இறங்கியிருந்தது. ஆனாலும் எங்களால் வெளியே வர முடியாத அளவிற்கு தண்ணீர் இருந்தது. தண்ணீர் போனால் தான் மின்சாரம். மழை பெய்தால் தான் மேழே தண்ணீரைப் பிடிக்க முடியும். மழை பெய்யாவிட்டால் தான் கீழே தண்ணீர் போகும். எப்படி விளையாடுகிறது விதி பார்த்தீர்களா?

என்ன செய்வது நாமும் ஏங்கேனும் போய் விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தும். எனக்கு இத்தனை நாட்கள் இருந்து விட்டோம் இப்பொழுது பின் வாங்குவதா வேண்டாம் என்று முடிவேடுத்து மீண்டும் நிலவரத்தை எல்லோருக்கும் பதிவு செய்தோம். இருவரின் மெபைவலிலும் சார்ஜ் குறையத் தொடங்கியது.

மதியத்திற்கு மேல் தண்ணீர் கார் பார்க்கிங்கிள் இருந்து முக்கால்வாசிக் குறைந்திருந்தது. பக்கத்து அப்பார்ட்மென்டில் நன்றாகக் குறைந்து அவர்கள் சம்ப்களையும் தரைத் தளத்தையும் சுத்தம் செய்யத் தொடங்கினார்கள். என் கணவரும் நாமும் நம் சம்பை சுத்தம் செய்யது விடலாம் என்று முடிவெடுத்து நாங்களும் மேல் வீட்டுக்காரரும் சேர்ந்து அதே ஆட்களைக் கொண்டு சுத்தம் செய்தோம். லாரியைத் தவிர எந்த ஒரு வாகனம் வரமுடியாத அளவுத் தண்ணீர் இன்னும் இருந்தது. ஒரு லாரி வந்தாலே தண்ணீர் உள்ளே வந்து விடுகிறது. இந்த நிலையில் இது சரியா தவறா என்றேத் தெரியவில்லை. சுத்தம் செய்து விட்டோம். லாரி அந்த வழியே வரக் கூடாது என்று வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை எங்களுக்கு.

இப்பொழுது கொசுக்கள் போய் விஷ ஜந்துக்கள் வரத் தொடங்கிவிட்டது.

சுத்தம் செய்து முடித்து ஒரு தண்ணீர் லாரியை அழைத்து தண்ணீர் ஊற்றவும் தொடங்கியிருந்தது எங்கள் எதிர் வீட்டு அப்பார்ட்மென்ட். இதற்கு மேல் இப்படியே உட்கார முடியாது என்று தண்ணீரில் இறங்கி விட்டனர் என் கணவரும், மேல் வீட்டுக் காரரும். அந்த அப்பார்ட்மெண்டில் பேசி அந்த லாரித் தண்ணீரிலேயே சிறிது தண்ணீர் வாங்கி டிரம்களிலும், குடங்களிலும் நிரப்பிக் கொண்டோம். அதற்குள் அங்கங்கே மின்விளக்குகள் எரியத் தொடங்கின. அந்த எதிர் வீட்டு அப்பார்ட்மெண்ட் வரை. இதற்குள் எங்கள் மெபைலை அந்த அப்பார்ட்மெண்ட்டில் கொடுத்து சார்ஜ் போடும் அளவுக்கு போய் விட்டார் என் கணவர். இன்றைய காலக் கட்டத்தில் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் பக்கத்து வீட்டில் இருப்பவரிடமே பழகுவதில்லை நாம். பக்கத்து அப்பார்ட்மெண்ட் வரை என்றால் மிகப் பெரிய விஷயம் தானே! அதற்கு காரணம் இந்த மழை தானே. அதற்க்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

எங்கள் வீட்டிற்கு முன்னால் தான் தண்ணீர் அதிகம் என்பதால் எங்கள் லைனில் மட்டும் மின்சாரம் இ்ல்லை. தண்ணீர் போனால் தான் போல என்ற முடிவிற்கு நாங்கள் வந்த வேளையில் எங்கள் வயிற்றில் பால் வார்ப்பது போல் மின்சாரம் வர எங்கள் முகங்களிலும் ஒளி பரவியது. உடனே மெபைலை வாங்கி வந்து எங்கள் வீட்டிலேயே சார்ஜ் போட்டு விஷயத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்தி மகிழ்ந்தோம்.

எல்லாம் நாங்கள் சரி செய்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பின் மழையில் கிளம்பிய அனைவரும் ஒவ்வொருவராக தொலைப்பேசியில் அழைத்து தண்ணீர் போய் விட்டதா? கரண்ட் வந்து விட்டதா? மழை இல்லையா? சம்பில் தண்ணீர் வந்து விட்டதா என்று பலக் கேள்விக்குப் பின் வரத் தொடங்கினார்கள் என்று சொல்லத் தான் வேண்டுமா??

இந்த அனுபவங்களை அனுபவிக்க அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. வேறு என்னத்தச் சொல்ல!!

19 November 2015

சென்னையில் ஒரு வெள்ளக் காலம்!

சென்னையில் மழை பெய்தாலும் பெய்தது எல்லோரும் வாட்ஸ் ஆப்பிலும், பேஸ் புக்கிலும் வெளுத்து வாங்குகிறார்கள். 

மழை ஒரு சந்தோஷம். அதுவே தொடர்மழையாகவோ அல்லது தொடர் கனமழையாகவோ இருந்தால் அது சந்தோஷமாக இருக்குமா நமக்கு. நிச்சயம் இருப்பது இல்லை. காரணம் பொருட் சேதமும் சில நேரங்களில் ஏற்படும் உயிர் சேதமும் நம்மை மிகவும் அச்சப்பட வைக்கிறது.

இந்த வெள்ளத்திற்கு மிக முக்கிய காரணமாகச் சொல்லப் படுவதில் ஒன்று ஏரி, குளங்கள் இருந்த இடத்தை எல்லாம் அடுக்குமாடி வீடுகளாக மாற்றியது. இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியவர்கள் நிலத்தை விற்றவர்களும் அதை வாங்கியவர்களும் மட்டுமல்லாமல் இந்த மழைக்கு காரணமாக இருக்கும் வருண பகவானும் தான். (அப்படி போடு அருவாளை!) 

வருண பகவான் வருடா வருடம் தவறாமல் மழையைப் பெய்ய வைத்திருந்தால் நமக்கும் எது ஏரி, எது குளம் என்று தெரிந்திருக்கும். நாமும் அதை ஏரி, குளங்களாகவே விட்டிருக்க வாய்ப்பும் உண்டு.

மக்கள் தொகையையும், வாகனப் பெருக்கத்தையும் அதிகம் ஆக்கி சுற்றுப்புறச்சூழலைக் மாசு படுத்தி விட்டு வருணபகவானைக் குறைச் சொல்லவதும் தவறு தான். என்னடா இவள் இப்படியும் பேசுகிறாள் அப்படியும் பேசுகிறாள் என்று எண்ணாதீர்கள் இதுவும் உண்மைதானே!!

எல்லாவற்றிற்க்கும் கடன்களை வாரி வாரி வழங்கும் வங்கிகளும் இதற்கு ஒரு வகையில் காரணம் என்றும் சொல்லலாம்.

நம் கட்டிட வல்லுனர்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை. இந்த இடத்தில் மழை பெய்தால் வெள்ளம் கட்டாயம் வரும் என்று தெரிந்தே இந்த அடுக்கு மாடி வீடுகளை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. கீழ்தளம் முழுவதும் வாகனங்களுக்காகவும், முதல் தளம் முதலே வீடுகளையும் அமைத்திருக்கிறார்கள். வெள்ளம் வந்தால் கீழ்தளம் மட்டுமே மூழ்கும் வகையில். என்ன ஒரு ஞானம்!

அடுத்தக் காரணமாக சொல்லப் படுவது ஏரி, குளங்களைத் தூர் வாராமல் விட்டது. இதில் இயற்கையின் பங்கோடு, நம் பங்கும் மிகமிக அதிகமாக இருக்குறது. இப்பொழுது அவசர அவசரமாகத் தூர்வாரியிருக்கும் காட்சிகளைத் தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருந்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும் அங்கே நீர் தாவரங்களோடு, நாம் தூக்கி ஏறிந்த பிளாஸ்டிக் பொருட்களும், பிளாஸ்டிக் காகிதங்களுமே அதிகம் என்று. அது நீர் வரும் தடங்களில் சென்று அடைத்துக் கொள்வதாலேயே பெரும் பாதிப்புக்குள்ளாகிறோம். அரசாங்கத்தை திட்டிக்கொண்டு இருக்காமல் நாம் செய்யும் இது போன்ற தவறுகளையும் திருத்திக் கொண்டால் இது போன்று எதிர் காலங்களில் வரும் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்கலாம் தானே. 

இந்த மழையால் எங்களுக்கு உண்டான அனுபவங்களை அடுத்த பதிவில் பதிகிறேன்.

07 October 2015

வைத்திரி

வைத்திரி (Vythiri). இது முழுவதும் காடுகளால் சூழப்பட்ட ஒரு சிறிய கிராமம். கேரளா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் வயாநாடு(Wayanad)  மாவட்டத்தில் அமைந்துள்ளது.  இங்கு நாம் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருந்தாலும் நாம் தங்கும் இடம் (Resort) கூட மிகச் சிறப்பாக இயற்கையோடு கலந்து இருக்கிறது. நாங்கள் தங்கிய ரிசாட் உள்ளேயே ஒரு சிறிய அழகிய நீர் அருவி இருக்கிறது. சென்னையில் தண்ணீருக்கே பஞ்சம். இங்கே எங்கே பார்த்தாலும் தண்ணீரும், அடர்ந்து வளர்ந்த மரங்களும் கண்ணுக்கும், மனதுக்கும் ஒரு விதமான சந்தேஷத்தையும், உற்சாகத்தையும் அளித்தது. சென்னையில் ஒரு வாளி தண்ணிரில் குளித்துவிட்டு இரண்டாவது வாளி எடுக்கலாமா  என்று யோசிக்க வேண்டி இருக்கிறது நாம் வாங்கும் லாரி தண்ணிரால். காரணம் பணம் மட்டும் இல்லை, இரண்டாம் முறை குளித்தால் ஒரு முறைக்கே கொட்டும் மூடி முழுவதும் கொட்டி விடுமோ என்ற பயத்தாலும் தான். கோரளத்துப் பெண்களின் கூந்தலை வர்ணிக்காத கவிஞர்கள் மிகவும் குறைவு. இருக்காத பின்னே காடுகளில்  உள்ள முலிகைகளை எல்லாம் சேர்த்து வரும் சுத்தமான தண்ணீரில் குளித்தால் நன்றாகத் தானே இருக்கும்.  முடி கொட்டி விட்டது என்று சொல்ல முடியாமல் வெட்டிக் கொண்டவர்கள் பலர். என்னையும் சேர்த்து.

அருவிக்கு வருவோம். இந்த ரிச்சாட்டில் இருந்த அருவி எனக்கு நம் ஊர் குற்றால அருவியை நினைவுபடுத்தியது. அங்கே நிறைய கூட்டம் இருக்கும். இங்கே இல்லை. முழுவதும் பாறைகள். நடுவே அருவி நீர். தொட்டாலே நடுங்க வைக்கும் குளிர். மறக்க முடியாத அனுபவம்.

வைத்திரியில் நிறைய அணைகள். குளங்கள், வனவிலங்கு சரணாலயங்கள் என பல சுற்றுலாத் தலங்கள் இருக்கிறது நாம் சுற்றிப் பார்க்க. இங்கே இயற்கைக்கே முதலிடம்.


போகெடு ஏரி (Pookode Lake). இந்த ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 770 மீட்டர் உயரத்தில் உள்ளது. சுத்தமான இந்த அழகிய ஏரிக்கு நீர் காபினி ஆற்றில் (Kabani River) இருந்து வருகிறது. இங்கு நாம் படகில் சவாரி செய்யும் பொழுது நம் கண்ணில் படும் இயற்கைக் காட்சிகளும், அழகிய பறவைகளும் வர்ணிக்க முடியாத அருமையான காட்சிகள். இந்த ஏரி நாம் பார்ப்பதற்கு நம் இந்தியா நாட்டின் வரைப் படம் போல் இருப்பது ஒரு வித சிலிர்ப்பை உண்டாக்கியது.

இந்தியாவிலேயே மிகப் பெரிய மண் அணை (Earth dam)யாகவும், ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய மண் அணை பனசுரா சாகர் அணை(BANASURA SAGAR DAM). மண் அணை என்பது மண், சல்லி. களிமண், பாறைகள் போன்றவற்றைக் கொண்டு அமைப்பது தான் மண் அணை. இந்த அணைக்கு நீர் காபினி நதியின் கிளை நதியான  காரமனதோடு(Karamanathodu ) நதியில் இருந்து வருகிறது. பனசுரா மலையைச் சுற்றி இது அமைப்பட்டு இருப்பதால் இதற்கு இந்த பெயர். படகில் செல்லும் போது நம்மைச் சுற்றி தண்ணீரும் அதைச் சுற்றி மலையும் கண்களுக்கு ஒரு பெரிய விருந்து நிச்சயம். மாலைப் பொழுது நெருங்கும் வேளையில் சாலையை மறைக்கும் மேக மூட்டங்களும், சிறு குழந்தை சினுங்குவதைப் போல் துறும் துறளையும் பார்க்கும் போது நாம் இன்னும் இளமையாகி விடுவோம்.

சோச்சிபாறா அருவி (Soochipara Falls). இது 656 அடி உயர மலையில் இருந்து விழுகிறது. சோச்சி என்றால் ஊசி என்றும் பாறா என்பது பாறையும் குறிக்கிறது. இந்த அருவி கடைசியாக சூழைக்கா ஆற்றில் (Chulika River) சென்று கலக்கிறது. போகும் வழி எல்லாம் பெரிய பெரிய பாறைகளாலேயே பாதை அமைத்திருக்கிறார்கள். மலை உச்சியை நாம் அடைய நடப்பதைத் தவிர வேறு வழி இல்லை. உச்சியை அடைந்தவர்கள் அருவியில் நனைவதை நிறுத்த நிச்சயம் மனம் இல்லாதவர்களாகவே இருப்பர் என்பது மட்டும் உண்மை.  நாங்கள் உச்சி வரை சொல்லா விட்டாலும் உச்சியில் இருப்பவர்களின் மனங்களை, குதுகழிப்பை கீழிருந்த படியே எங்களால் உணர முடிந்தது.

கல்போட்டாவில் இருந்து 25கீ.மீ. தொலைவில் உள்ள ஒரு இடம் தான் இடாக்கல் குகை (Edakkal Caves). இங்கே இரண்டு குகைகள் உள்ளன. ஒன்றை ஒன்று தாங்கிக் கொண்டு. இந்த குகை கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் உயரத்தில் இருப்பதாலும், இந்த குகை சில குறிப்பிட்ட அளவு எடையையே தாங்கும் என்பதாலும் குகைக்குள் சொல்வோரின்  எண்ணிக்கை வரையருக்கப் பட்டுள்ளது.  குகைக்கு உள்ளே நம் முன்னோர்கள் வரைந்த மனிதர்கள், விலங்குகள், மரங்கள், பறவைகள்,  சக்கரங்கள, அவர்கள் பயன்படுத்திய போக்குவரத்து வாகனங்கள், எழுத்துக்கள், எண்கள் இன்னும் பல. நம்மை நம் முன்னோர்கள் காலத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார்கள்.  போகும் பாதை மிக மிகக் கடினமே. அடிவாரம் வரை செல்லத் தான் நமக்கு வாகன வசதி உண்டு. பின் நடராஜா சர்வீஸ் தான். கடின பாறைகளீல் ஏறியே செல்ல வேண்டும். முதல் பாதி பாதை நன்றாக இருப்பதால் நடப்பது சிரமமாக இருக்காது. அடுத்தப் பாதி மலை ஏறுவது மட்டுமே ஓரே வழி. நம் முன்னோர்கள் எல்லாம் எப்படித் தான் ஏறினார்களோ சத்தியமாகத் தெரியவில்லை. நாமும் நம் முன்னோர்களை வாழ்ந்த காலத்திற்ககுப் போக வேண்டும் என்றால் ஏறித் தான் ஆக வேண்டும். வரும் பாதை இரும்பு படிக்கட்டுகளால் அமைத்திருப்பதால் இறங்குவது கடினமாக இருக்காது. இங்கே சென்று வர கட்டாயம் ஒரு முழு நாள் தேவை.

வைத்ரியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் நான் மேலே சொன்னது மட்டுமல்லாமல் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் பல இருக்கின்றன. இங்கே உணவு எங்களுக்கு ஒரு பிரச்சனையாக இல்லை.

இங்கு முக்கியத் தொழில் விவசாயம். தேயிலை, காபி, பாக்கு மற்றும் மிளகு இவையே இங்கு முக்கிய விவசாயம். தேயிலைத் தோட்டத்தை நான் மூனார்ரில் பார்த்திருக்கிறேன். காபியைப் பார்த்தது இங்க தான். ஜனவரி முதல் மார்ச் மிளகு அறுவடைக் காலம். அந்த சமயம் இங்கு வந்தால் மிளகைக் குறைந்த விலைக்கு அள்ளிக் கொண்டு போகலாம்.

நேரமும், விடுமுறையும், பணமும் இருந்தால் ஒரு வாரக் காலம் இயற்கையோடு இயற்கையாக இருந்து விட்டு வரலாம்.