17 May 2008

பத்து மாதக் குழந்தை

சென்னைக்கு நான் பத்து மாதக் குழந்தை. என்ன இதற்கு முன் சென்னைக்கு நீ வந்ததே இல்லையா? என்று கேட்காதீர்கள். அதை நான் கர்பகாலம் என்று தான் சொல்வேன்.(4+6) என கல்லூரி நாட்களிலும், கல்லூரி முடிந்து வேலைத் தேடும் போது என்று பத்து மாதம் இருந்திருப்பேன் கர்பத்தில் உள்ள குழந்தை வயிற்றுனுள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதைப் போல நானும் என் சித்தப்பா வீட்டிலும், என் மாமா வீட்டிலும் கொஞ்சம் கொஞ்சம் உறவுகள் பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டேன். உறவுகளிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும். எப்படி நடந்தால் அவர்களுக்கு நல்லவளாக இருப்பேன் என்று கொஞ்சம் கொஞ்சமாக நன்றாகவே கற்றுக் கொண்டேன்.அப்போது நான் கூட்டுப் பறவை. நிறைய கட்டுப்பாடுகள். உடைக்கவும் முடியாது. அதில் சிக்கித் தவிக்கவும் மனம் வராது.

ஆனால் இன்று நான் சுதந்திரப் பறவை. என்னைக் கேட்க யாருமில்லை என்றாலும் நான் வரம்பு மீற நினைத்ததில்லை.ஹாஸ்டல் வாழ்க்கை. வொவ்வொரு மொழி பேசும் பெண்கள். வித்தியாசமான சூழ்நிலை.

நினைத்ததை சுதந்திரமாக இன்று செய்ய முடிகிறது. கார் ஒட்டக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆசைப் பட்டேன். அதற்கும் சேர்ந்தாகி விட்டது. இந்த மாத இறுதிக்குள் நிரந்தர உரிம்மும் வாங்கி விடுவேன். நிறைய புத்தகங்கள் படிக்க ஆசை. அதையும் ஆரம்பித்து விட்டேன். ஓவியம் வரையும் எண்ணம் மட்டும் நிறைவேறாமல் இருக்கிறது. ஐ.டி யில் ஐக்கியம் ஆகிவிட்டேன் அல்லவா, அலுவலக நாட்களில் சுத்தமாக நேரம் கிடைக்க மாட்டேங்கிறது. வார இறுதியில் துணி துவைக்கவும், அலமாரியை சீர்படுத்தவும், தேவையானவற்றை வெளியேச் சென்று வாங்கவுமே நேரம் சரியாக உள்ளது.

ஆனாலும் எனக்கு இந்த வாழ்க்கைப் பிடித்திருக்கிறது. என்னாலும் பிறருக்கு உதவ முடிகிறது என்பதாலும், என் அப்பா, அம்மா, தங்கை எல்லோருக்கும் அவர்கள் ஆசைப்படுவதை எல்லாம் வாங்கிக் கொடுக்க முடிகிறது என்பதாலும் எனக்கு இந்த வாழ்க்கைப் பிடித்திருக்கிறது. ஆனால் வீட்டுச் சாப்பாடு மட்டும் எனக்குக் கிடைக்கவே மாட்டேங்கிறது. இந்த ஒன்றைத் தவிர நான் பத்து மாதக் குழந்தையாக நிறைய புதுபுதுப் அனுபவங்களைப் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

சரி சரி இப்படியே வெட்டிக் கதை பேசிக்கிட்டு இருந்தா வேலையை யார் பார்ப்பது.. என்னபா ரைட்டா?? ஒக்கே அதனால இப்பால ஜீட் விட்டுக்கினு அப்பால வரேன்....

No comments: